அரியலூரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு- விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


அரியலூரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு- விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Nov 2020 8:46 AM GMT (Updated: 27 Nov 2020 8:46 AM GMT)

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தாமரைக்குளம், 

விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நலன்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி நாடு முழுவதும் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ‘நிவர்‘ புயல் காரணமாக தமிழக அரசு 16 மாவட்டங்களுக்கு மறியல் போராட்டம் நடத்தக்கூடாது என உத்தரவிட்டது.

அதன்படி நேற்று அரியலூர் மாவட்டத்தில் மறியல் போராட்டம் நடத்தப்படாமல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் மாதா கோவில் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் தண்டபாணி, ஐ.என்.டி.யு.சி மாவட்ட தலைவர் விஜயகுமார், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் துரைசாமி, தொ.மு.ச. மாவட்ட தலைவர் மகேந்திரன், எஸ்.எம்.எஸ். மாவட்ட செயலாளர் திருவள்ளுவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

நிவாரணம்

ஆர்ப்பாட்டத்தில் ஏழை குடும்பங்களுக்கு மாதம் ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும். 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி, அதை நகரங்களுக்கு விரிவாக்கம் செய்து கொடுக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும்.

ரெயில்வே, பாதுகாப்புத்துறை, தொழிற் சாலைகள், துறைமுகங்கள் உள்ளிட்டவைகளை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது. தொழிலாளர் மற்றும் விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சட்டநாதன், கனகராஜ், சிற்றம்பலம், மாரியப்பன், மாரியம்மாள், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story