அவினாசி, பல்லடம், ஊத்துக்குளியில் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 429 பேர் கைது


அவினாசி, பல்லடம், ஊத்துக்குளியில் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 429 பேர் கைது
x
தினத்தந்தி 27 Nov 2020 2:38 PM GMT (Updated: 27 Nov 2020 2:38 PM GMT)

பொது வேலை நிறுத்த கோரிக்கைகளை வலியுறுத்தி அவினாசி, பல்லடம், ஊத்துக்குளியில் தொழிற்சங்கத்தினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 429 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவினாசி,

அவினாசி பழைய பஸ் நிலையம் அருகில் பொது வேலை நிறுத்த கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது வருமான வரி செலுத்தாத ஏழை குடும்பங்களுக்கு மாதம் ரூ.7,500 நிவாரண உதவி, 10 கிலோ அரிசி, மற்றும் கோதுமை வழங்க வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி நகர்புறங்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும். நல வாரியங்களை சீர்குலைக்கும் போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கோஷம் எழுப்பப்பட்டது.

102 பேர் கைது

போராட்டத்தில் சி.ஐ.டி . யு., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப்., ஐ.என்.டி.யு.சி சங்க நிர்வாகிகள் முத்துசாம், வெங்கடாசலம், இசாக், நவநீத கண்ணன் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் திரளானோர் சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அவினாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 22 பெண்கள் உள்பட 102 பேரை கைதுசெய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அவினாசியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டனர்.

சேவூர்

இதுபோல் சேவூரிலும் இதே கோரிக்கைகளை முன்வைத்து சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி. யு.சி., எல்.பி.எப், ஐ.என்.டி. யூ.சி., எம்.எல்.எப்., விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் சேவூர் கைகாட்டி ரவுண்டானாபகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 80 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி, ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட தொழிற்சங்க செயலாளர் இசாக், சேவூர் தி.மு.க ஒன்றிய பொறுப்பாளர் க.பால்ராஜ், சேவூர் தி.மு.க. கிளை செயலாளர் மு.பாரதி, சேவூர் வட்டார காங்கிரஸ் தலைவர் முசபர் ஆலம் உள்பட தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஊத்துக்குளி

இதுபோல் ஊத்துக்குளி ஆர்.எஸ்.-ல் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களும், விவசாயிகள், விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்தவர்களும், வாலிபர் சங்கத்தை சேர்ந்தவர்களும் ஊர்வலமாக வந்து ஊத்துக்குளி ஆர்.எஸ்.பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டதாக 60 பெண்கள் உள்பட 142 பேரை போலீசார் கைது செய்து தனியார்மண்டபத்தில் தங்க வைத்திருந்தனர்.

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார், ம.தி.மு.க ஒன்றிய செயலாளர் வி.சுந்தரராஜு, காங்கிரஸ் வட்டார தலைவர் பழனிசாமி, தி.மு.க. நகர செயலாளர் ராசுக்குட்டி, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.சின்னசாமி, சி.ஐ. டி.யு. மாவட்ட துணைச்செயலாளர் ஜெ.கந்தசாமி உட்பட திரளானோர் பங்கேற்றனர்.

பல்லடம்

பல்லடம் பஸ் நிலையம் அருகே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் திடீரென்று சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட 90 பேரை பல்லடம் போலீசார் கைது செய்தனர்.

இதுபோல் குன்னத்தூர் பஸ் நிலையம் அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், நகர செயலாளர் சக்திவேல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தசர்வேஸ்வரன், காளிதாஸ், கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பன்னீர்செல்வம், வெற்றிவேல், சின்னச்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுதொடர்பாக 15 பேரை போலீசார் கைது செய்தனர். அதன்படி மொத்தம் 429 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மாலையில்விடுதலை செய்யப்பட்டனர். 

Next Story