மாவட்டம் முழுவதும் இன்று கார்த்திகை தீப திருவிழா கொண்டாட்டம் அகல் விளக்குகள் விற்பனை படுஜோர்


மாவட்டம் முழுவதும் இன்று கார்த்திகை தீப திருவிழா கொண்டாட்டம் அகல் விளக்குகள் விற்பனை படுஜோர்
x
தினத்தந்தி 29 Nov 2020 3:58 AM GMT (Updated: 29 Nov 2020 3:58 AM GMT)

தர்மபுரி மாவட்டம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அகல் விளக்குகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது.

தர்மபுரி,

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீப திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. விழாவை யொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிவன், முருகன் கோவில்கள் மற்றும் அனைத்து பிரசித்தி பெற்ற கோவில்களில் இன்று காலை பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், மாலை மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதையொட்டி அந்தந்த கோவில்களில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி உடனாகிய மல்லிகார்ஜூனசாமி கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி இன்று காலை பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. மாலை கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் மகாதீபம் ஏற்றுதல், மஹா தீபாராதனை நடக்கிறது. இதேபோல் தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்ரமணிய சாமி கோவிலில் இன்று காலை பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், மாலை மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு கோவில் அருகே சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சியும் சிவசுப்ரமணிய சாமி சர்வ அலங்காரத்தில் கோவில் வளாகத்திலேயே திருவீதி உலாவும் நடக்கிறது.

அகல் விளக்குகள் விற்பனை

இதேபோன்று தர்மபுரி நெசவாளர் நகர் மகா லிங்கேஸ்வரர் கோவில், ஓம்சக்தி மாரியம்மன் கோவில், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில், அன்னசாகரம் சிவசுப்ரமணிய சாமி கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீபத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி தர்மபுரி நகரில் அகல் விளக்குகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. குறிப்பாக லட்சுமி விளக்கு, விநாயகர் விளக்கு, துளசி மாட விளக்கு, 5 ஸ்டார் விளக்கு, தாமரை விளக்கு, குபேர விளக்கு, குத்துவிளக்கு உள்ளிட்ட அகல் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. ஒரு விளக்கு ரூ.1 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை பெண்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

Next Story