அம்மா இருசக்கர வாகனத்துக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


அம்மா இருசக்கர வாகனத்துக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 29 Nov 2020 10:15 PM GMT (Updated: 29 Nov 2020 6:16 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனம் பெற வேலைக்கு செல்லும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் மகளிர் எளிதாக வேலைக்கு சென்று வர வசதியாக 50 சதவீதம் மானியத்துடன் அம்மா இருசக்கர வாகன திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2020-21-ம் ஆண்டுக்கான அம்மா இருசக்கர வாகனம் வழங்க அரசு அனுமதி அளித்து உள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற தகுதி உள்ள பெண்கள் விண்ணப்பப் படிவத்தை ஊராட்சி பகுதிகளில் உள்ள மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்திலும், பேரூராட்சி பகுதியில் உள்ள மனுதாரர்கள் சம்பந்தபட்ட பேரூராட்சி அலுவலகத்திலும், நகராட்சி பகுதியில் உள்ள மனுதாரர்கள் சம்பந்தபட்ட நகராட்சி அலுவலகத்திலும், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள மனுதாரர்கள் மாநகராட்சியின் நான்கு மண்டல அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

நிறுவனப் பணியில் உள்ள மற்றும் முறைசாரா பணியில் உள்ள பெண்கள், கடைகள் மற்றும் இதர நிறுவனங்களில் உள்ள பெண்கள், அரசு சார்பு நிறுவனம், தனியார் நிறுவனம், சமுதாய அமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் மகமை அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள், பெண் வங்கி ஒருங்கிணைப்பாளர், பெண் வங்கி வழிநடத்துநர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள், சிறப்பு ஊதிய விகிதத்தில் வருட வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ஊதியம் பெறும் மகளிர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமையலர்கள் மற்றும் உதவியாளர்கள், கூட்டுறவு நிறுவன சங்கங்கள், கடைகளில் பணிபுரியும் மகளிர் மற்றும் பிற அரசு துறைகளில் சிறப்பு ஊதியத்தில் பணிபுரியும் மகளிர்கள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊரகப் பகுதியில் பணிபுரியும் மகளிர்கள் உரிய அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.

பயனாளி அவருடைய சொந்தப் பணம் அல்லது அரசு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அல்லது பாரத ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்ட பிற நிதி நிறுவனங்களில் இருந்து கடன் பெறலாம். சொந்த நிதியெனில், பயனாளி வங்கிக் கணக்குக்கும், கடன் பெற்றால் நிறுவன வங்கியின் கடன் கணக்குக்கும் மானியத் தொகை விடுவிக்கப்படும். மாவட்ட தேர்வுக் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பயனாளிகள் 45 நாட்களுக்குள் வாகனங்கள் வாங்கி உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து மானியத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். தொலைதூரப் பகுதி, மகளிரைக் குடும்பத் தலைவராகக் கொண்ட பெண் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். குடும்பத்தில் ஒரு மகளிருக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும். மேலும் 18 முதல் 45 வயது வரை உள்ள இருசக்கர வாகனம் உரிமம் பெற்ற பெண்கள் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்ப மனுவுடன் பிறந்த தேதிக்கான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், உரிய அலுவலரால் வழங்கப்பட்ட இருசக்கர வாகனம் உரிமம் நகல் அல்லது இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமத்துக்கு மனு செய்துள்ளவர்கள், அதற்கான நகல் ஆகியவற்றை வைத்து விண்ணப்பிக்கலாம். தேர்வாகும் நிலையில் இருசக்கர வாகன உரிமம் நகல் சமர்பித்த பின்னரே மானியத் தொகை வழங்குவதற்குப் பரிசீலிக்கப்படும். வேலை வழங்கும் அலுவலரால், நிறுவனத்தால் வழங்கப்படும் வருமான சான்றிதழ் அல்லது சுய வருமான சான்றிதழ், நிறுவனத் தலைவர், சங்கங்கள் மூலம் ஊதியம் பெறுபவர்களின் ஊதியச் சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, கல்வித் தகுதிக்கான சான்றிதழ்கள், பாஸ்போட் அளவு புகைப்படம், சாதி சான்றிதழ் (தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர்) , உரிய அலுவலரால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, இருசக்கர வாகனத்தின் விலைப்புள்ளி ஆகிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story