தர்மபுரி மாவட்டத்தில் கோவில்களில் கார்த்திகை தீபத்திருவிழா வீடுகளில் அகல் விளக்கேற்றி பெண்கள் வழிபாடு


தர்மபுரி மாவட்டத்தில் கோவில்களில் கார்த்திகை தீபத்திருவிழா வீடுகளில் அகல் விளக்கேற்றி பெண்கள் வழிபாடு
x
தினத்தந்தி 30 Nov 2020 2:43 AM GMT (Updated: 30 Nov 2020 2:43 AM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிவன், முருகன் கோவில்களில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வீடுகள் தோறும் பெண்கள் அகல்விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்கள், முருகன் கோவில்களிலும் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில்களில் சாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார்கள். மேலும் பெண்கள் கோவில்களில் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர். இதேபோன்று வீடுகள் தோறும் பெண்கள் அகல்விளக்கேற்றி வழிபட்டனர். சிறுவர்-சிறுமிகள் மத்தாப்புகளை கொளுத்தியும், பட்டாசுகளை வெடித்தும் கார்த்திகை தீபத்தை கொண்டாடினார்கள்.

தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி உடனாகிய மல்லிகார்ஜூனசாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், வழிபாடும் நடைபெற்றது. தொடர்ந்து மாலை கோவில் கொடிமரத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டு தீப வழிபாடு நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்து கொண்டு அகல்விளக்குகளை ஏற்றி வழிபாடு நடத்தினார்கள்.

சாமி திருவீதி உலா

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் நேற்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை மகா தீபம் ஏற்றப்பட்டு சாமி சர்வஅலங்காரத்தில் அருள்பாலித்தார். கோவில் முன்பு சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்திலேயே சாமி திருவீதி உலா நடைபெற்றது.

இதேபோன்று தர்மபுரி நெசவாளர் நகர் மகாலிங்கேஸ்வரர் கோவில், ஓம்சக்தி மாரியம்மன் கோவில், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமணசாமி கோவில், அன்னசாகரம் சிவசுப்பிரமணியசாமி கோவில், கடைவீதி அம்பிகாபரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவாணேஸ்வரர் கோவில் உள்பட நகரில் உள்ள அனைத்து கோவில்களிலும் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

தீர்த்தமலை

இதேபோன்று பாப்பாரப்பட்டி திரிபுரசுந்தரி சோமேஸ்வரர் கோவில், பழைய சுப்பிரமணியசாமி கோவில், புதிய சிவசுப்பிரமணியசாமி கோவில் மற்றும் அழகுமலை முருகன் கோவில்களில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. மலையூர் கோபால்சாமி கோவில், கிட்டம்பட்டி கதிரியப்பன் கோவில், இண்டூர் சுப்பிரமணியசாமி கோவில், நத்தஅள்ளி சிவன் கோவில், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவில், தீர்த்தமலை தீர்த்தகீரிஸ்வரர் கோவில், சவுளுப்பட்டி ஆதிலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பென்னாகரம் உள்ளிட்ட அனைத்து ஊர்களில் உள்ள கோவில்களில் கார்த்திகை தீபத்தையொட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் முககவசங்கள் அணிந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story