கூட்டுக்குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழா: முதல்-அமைச்சர் 4-ந்தேதி மதுரை வருகை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தகவல்


கூட்டுக்குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழா: முதல்-அமைச்சர் 4-ந்தேதி மதுரை வருகை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தகவல்
x
தினத்தந்தி 30 Nov 2020 5:15 AM GMT (Updated: 30 Nov 2020 5:15 AM GMT)

ரூ.1200 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 4-ந்தேதி மதுரை வருகிறார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை,

மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்த நோயாளிகளுக்கு அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை மற்றும் அம்மா சாரிடபுள் டிரஸ்டு சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முயற்சியால் தினமும் இலவச உணவு அம்மா கிச்சனில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்மா கிச்சனின் 150-வது நாள் நிறைவு நிகழ்ச்சி தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடந்தது. இதில் மறைந்த ஜெயலலிதா உருவ படத்திற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குத்து விளக்கேற்றி மரியாதை செலுத்தினார். இதில் கலெக்டர் அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் விசாகன், எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, சரவணன், மாணிக்கம், பெரியபுள்ளான், நீதிபதி, பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், தமிழரசன், அ.தி.மு.க. நிர்வாகிகள் அய்யப்பன், செல்லம்பட்டி ராஜா, கவிதா, ஐ.பி.எஸ்.பாலமுருகன், ஆரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புயல் நகர்வு கண்காணிப்பு

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 18 சதவீதமாக இருந்தது. தற்போத இந்த நோய் தொற்று 0.5 சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனா பாதுகாப்பு மையத்தில் யாரும் இல்லாததால் உணவு தேவை எழவில்லை என்று கலெக்டரும், மருத்துவ குழுவும் கூறியுள்ளது. எனவே அம்மா கிச்சன் தற்போது நிறைவு பெறவுள்ளது. இது நிரந்தரமாக அல்ல தேவை ஏற்பட்டால் மீண்டும் அம்மா கிச்சன் திறக்கப்படும்.

சமீபத்தில் ஏற்பட்ட நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதிலும் உள்ள ஆறு, கண்மாய் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி உள்ளது. தற்போது ஒரு புயல் ஆரம்பமாகி உள்ளது. இந்த புயலை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். புயல் நகர்வு உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது. இயற்கை புயலை நாங்கள் சமாளிப்பது போல், செயற்கையாக வீச வரும் மு.க.ஸ்டாலின் புயலையும் வென்று காட்டுவோம். அதற்காக நீங்கள் இப்போது இருந்தே தேர்தல் வேளையை தொடங்கி விடுங்கள். அ.தி.மு.க.வில் உண்மையாக வேலை பார்த்தால் கண்டிப்பாக பதவி தேடி வரும்.

முதல்-அமைச்சர் 4-ந்தேதி வருகை

கனிமொழி எடப்பாடியில் பிரசாரம் செய்யப் போவதாக கூறியுள்ளார். அவர் எடப்பாடியில் அல்ல. விண்வெளியில் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்தாலும் அ.தி.மு.க.வை வீழ்த்த முடியாது. மதுரை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ரூ.1200 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டவும், ரூ.33 கோடி மதிப்பில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்தையும் திறந்து வைக்க முதல்-அமைச்சர் மதுரைக்கு வருகிற 4-ந் தேதி வர உள்ளார். இதைதொடர்ந்து சிவகங்கைக்கு கொரோனா பாதிப்பு ஆய்வு செல்ல உள்ளார். மதுரை வரும் அவருக்கு மதுரை மாவட்ட எல்லையில் அ.தி.மு.க. பேரவை மற்றும் புறநகர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. ரஜினி நல்ல மனிதர். அரசியல் நிலை தொடர்பான ரஜினியின் முடிவை மக்கள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். நாங்களும் அவரின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story