வீட்டுமனை வழியாக எண்ணெய் குழாய் பதிப்பதை கைவிட வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் வலியுறுத்தல்


வீட்டுமனை வழியாக எண்ணெய் குழாய் பதிப்பதை கைவிட வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 Dec 2020 2:49 AM GMT (Updated: 1 Dec 2020 2:49 AM GMT)

வீட்டுமனை வழியாக எண்ணெய் குழாய் பதிப்பதை கைவிட வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தஞ்சை,

தஞ்சை மாவட்டம் திருக்கானூர்பட்டி கருப்பன்கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் சரோஜா தலைமையில் தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனாவரம் முருகேசன், சமவெளி விவசாயிகள் இயக்க தலைவர் பழனிராஜன், தமிழ்தேச மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் அருண்சோரி ஆகியோர் முன்னிலையில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் மேற்கண்ட முகவரியில் கடந்த 4 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். குறவர் பழங்குடி சமூகத்தை சேர்ந்த 7 குடும்பங்கள் சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்டி வசித்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அதிகாரிகள் எங்கள் மனையில் எண்ணெய் குழாய் பதிக்க இருப்பதாகவும், இதனால் 4 வீடுகள் அடிபடும் என தெரிவித்தனர். இது குறித்து நாங்கள் கலெக்டரிடம் புகார் அளித்தோம்.

அதிகாரிகள் மீண்டும் முயற்சி

இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எங்கள் வீடுகளுக்கு எந்த பாதிப்பும் வராது என்றும் எங்கள் நிலத்தின் வழியாக குழாய்கள் பதிக்கப்படாது என்றும் மாற்று வரியில் குழாய் பதிப்பதற்கான பணியை முன்னெடுப்பதாக உத்தரவாதம் வழங்கப்பட்டது.

ஆனால் மீண்டும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் குழாய் பதிக்கும் வேலையை மேற்கொள்கின்றனர். ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்புலுக்கு மாறாக அவர்கள் செயல்படுகிறார்கள். எனவே கலெக்டர் எங்கள் சமூகத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் எண்ணெய் குழாய்கள் எங்கள் மனை வழியாக வராமல் மாற்று வழித்தடத்தில் பதிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story