புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை இலுப்பூர், அரிமளத்தில் 3 வீடுகள் இடிந்து விழுந்தன


புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை இலுப்பூர், அரிமளத்தில் 3 வீடுகள் இடிந்து விழுந்தன
x
தினத்தந்தி 4 Dec 2020 12:14 AM GMT (Updated: 4 Dec 2020 12:14 AM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த கனமழையால் இலுப்பூர், அரிமளம் பகுதிகளில் 3 வீடுகள் இடிந்து விழுந்தன. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிவர் புயலின் போது போதிய மழை பெய்யவில்லை. இதனால் ஏரி, குளங்கள் வறண்டு கிடந்ததால் விவசாயிகள் கவலைபட்டு வந்தனர். இந்நிலையில் புரெவி புயலின் தாக்கத்தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடங்கிய மழை இடை விடாது பெய்து வருகிறது. இதனால் புதுக்கோட்டையின் பல பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டு உள்ளது. வடக்கு ராஜ வீதி தி.மு.க. அலுவலகம் முன்பாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேல ராஜ வீதி, பழனியப்பா முக்கம் அருகேயும் வெள்ளம் போல் மழை நீர் செல்கிறது. பெரியார்நகர் பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ள நிலையில் நகராட்சி பணியாளர்கள் மழை நீர் தேங்காதபடி அடைத்திருந்த குப்பைகளை அகற்றி மழைநீரை வெளியேற்றினர். மேலும் குடியிருப்பு பகுதியான கம்பன் நகரில் வீடுகளுக்குள்ளும் மழைநீர் சூழ்ந்தது. வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்திலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. பலத்த காற்று வீசியதால் சில இடங்களில் மரங்கள் சாய்ந்தாடின. புதுக்கோட்டை நகரின் முக்கிய கடைவீதி பகுதிகளான தெற்கு ராஜ வீதி, கீழ ராஜ வீதி போன்ற பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.

கறம்பக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழைநீர் வடிகால்கள் சீரமைக்கப்படாததால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இதேபோல் வரத்து வாய்கால்கள் சீரமைக்கப்படாததாலும், ஆக்கிரமிப்பாலும் கறம்பக்குடி பெரியகுளம், குமரகுளம், மாங்கொட்டைகுளம், புதுக்குளம், ராட்டினா குளம் உள்ளிட்ட பாசன குளங்களுக்கு செல்லும் தண்ணீர் அங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் குடியிருப்பு வாசிகளும், வியாபாரிகளும் அவதிப்பட்டு வருகின்றார்.

வீட்டின் சுவர் இடிந்தது

இதற்கிடையே நேற்று அதிகாலை பெய்த கனமழையில் கறம்பக்குடி பெரியகடைவீதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 50) என்பவரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது இதில் வீட்டின் மற்றொரு பகுதியில் தூங்கிக்கொண்டிருந்த வெங்கடேசன், அவரது மனைவி விஜயராணி, மகன் பாரதி, மகள் வைதேகி ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன.

வீடு இடிந்தது

இலுப்பூர் அன்னவாசல், சித்தன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி, குடுமியான்மலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்தது. இந்த தொடர் மழையால் சாலைகளிலும் தெருகளிலும் தண்ணீர் தேங்கியது. பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகளும், கடைவீதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் இலுப்பூர் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த ஜான்சந்தியாகு என்பவர் ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லதாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இலுப்பூர், அன்னவாசல், புதுக்கோட்டை சென்ற பஸ்களில் பயணிகள் கூட்டம் இல்லாததால் பஸ்களில் பயணிகள் இல்லாமலே சென்றது. இலுப்பூர் நவம்பட்டியை சேர்ந்த காலனி வீட்டில் வசிப்பவர் ராஜூ. இவரது வீட்டின் மேற்கூறையில் இருந்த சிமெண்டு பூச்சுக்கள் திடிரென விழுந்தது. அன்னவாசல் ஒன்றியம் முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சியில் தெருவில் அடைத்திருந்த மழை தண்ணீரை மழையை பொருட்படுத்தாமல் ஊராட்சி மன்ற தலைவரே கால்வாய் அமைத்து வெளியேற்றினார். இதனை அப்பகுதி பொதுமக்கள் பராட்டினார்.

அன்னவாசலில் உள்ள அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் நேற்று பெய்த மழையில் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் அனைத்தும் தண்ணீரில் மிதக்கிறது.

வடகாடு, ஆலங்குடி, கீரமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்தது.

திருமயம், கோட்டைப்பட்டினம்

திருமயத்தில் கன மழை பெய்ததையடுத்து திருமயம்-பொன்னமராவதி சாலை பெருந்துறை பஸ் நிறுத்தத்தில் உள்ள பழமை வாய்ந்த ஆலமரம் சாய்ந்து விழுந்தது. போக்குவரத்திற்கு இடையூறாக சாய்ந்த ஆலமரத்தை நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் அங்கு வந்து மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினார்கள்.

கோட்டைப்பட்டினம் கடலோர பகுதியில் தொடர் மழை பெய்தது. இப்பகுதிகளில் மழையின் வேகம் அதிகமானதால் கடலோர பகுதிகளில் பல இடங்களில் கடல்நீர் கொந்தளிப்புடன் காணப்பட்டது. பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. சில மண் வீட்டு சுவர்களும் இடிந்து விழுந்தன.தொடர் மழையால் இப்பகுதியில் உள்ள ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி காணப்படுகிறது. மீமிசல், அருகே உள்ள தாளானூர், முத்துக்குடா கிராமங்களில் உள்ள 2 வீடுகளில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

2 வீடுகள் இடிந்தன

அரிமளம் ஒன்றியம் ஆயிங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி தவமணி. கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் தவமணியின் ஒருபக்க வீட்டுச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. தகவலறிந்த அரிமளம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆபிஷாராணி, ஆணையர் ராமச்சந்திரன் ஆகியோர் வீட்டில் இருந்தவர்களிடம் இங்கே தங்கக்கூடாது பள்ளியில் சென்று தங்குங்கள் எனக்கூறினார். அதிகாரிகளை சந்தித்து தவமணி, அவருடைய மகன் சுப்பிரமணி மற்றும் மருமகள் நிறைமாத கர்ப்பிணியான கனிமொழி ஆகியோர் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென வீடு முழுவதும் இடிந்து விழுந்தது. உடனடியாக அவர்கள் ஆயிங்குடியில் உள்ள தொடக்கப்பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று சமுத்திரம் ஊராட்சி தாஞ்சூர் அண்ணா நகர் தெருவில் வசித்து வரும் ராமன். முடிதிருத்தும் தொழிலாளி. வீட்டில் ராமன் அவருடைய மனைவி பஞ்சு, மருமகன் அங்கு ராஜ், மகள் சாந்தி ஆகியோர் வீட்டில் இருக்கும்பொழுது திடீரென ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு தாஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கந்தர்வகோட்டை, அறந்தாங்கி

ஆவுடையார்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பொன்னமராவதி ஒன்றிய பகுதிகளில் கன மழை பெய்துள்ளது. இதனால் பொன்-புதுப்பட்டியிலிருந்து வேகுப்பட்டி செல்லும் ரோட்டில் மாம்பழத்தான் ஊரணி அருகே காற்றுக்கு நடு ரோட்டில் கருவேல மரம், முருங்கை மரம் விழுந்ததை தூய்மை பணியாளர்களால் அப்புறப்படுத்தப்பட்டது.

கறம்பக்குடி கச்சேரி வீதி, காட்டாத்தி, கரும்புலிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. கந்தர்வகோட்டை திருச்சி சாலைக்கு கிழக்கு, பெருமாள் கோவில் வீதிக்கு தெற்கு மற்றும் வடகாடு காமராஜபுரம், மட்டையன்பட்டி கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. அறந்தாங்கி பகுதியில் பலத்த மழையால் 2 வீடுகளில் சுற்றுச்சுவர் இடிந்தன.

Next Story