‘புரெவி’ புயல் எதிரொலி: நாகை மாவட்டத்தில் 2 நாட்களாக விடிய, விடிய வெளுத்து வாங்கிய கன மழை


‘புரெவி’ புயல் எதிரொலி: நாகை மாவட்டத்தில் 2 நாட்களாக விடிய, விடிய வெளுத்து வாங்கிய கன மழை
x
தினத்தந்தி 4 Dec 2020 2:09 AM GMT (Updated: 4 Dec 2020 2:09 AM GMT)

‘புரெவி’ புயல் எதிரொலியாக நாகை மாவட்டத்தில் 2 நாட்களாக விடிய, விடிய கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் வீட்டில் மேற்கூரை இடிந்து விழுந்தது.

நாகப்பட்டினம்,

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ‘புரெவி’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘புரெவி’ புயல், பாம்பன் - கன்னியாகுமரி இடையே இன்று(வெள்ளிக்கிழமை) கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் அறிவித்துள்ளது.

‘புரெவி’ புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து விடிய,விடிய கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர் மழையால் நாகை மாவட்டத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக நம்பியார் நகரில் நள்ளிரவில் குடியிருப்புகளுக்கு மழைநீர் புகுந்தது. இதனால் அந்த பகுதி மக்கள், மழைநீரை வாளியில் எடுத்து வந்து வெளியே ஊற்றினர். நாகை புதிய பஸ் நிலையத்தில் மதியம் பஸ்சுக்காக பயணிகள் காத்துகொண்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டை செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியில் உள்ள கட்டிடத்தில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் இருந்த பயணிகள் அலறி அடித்து கொண்டு ஓடினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மாவட்டத்தில் தொடர் மழையால் ஒரு சில இடங்களில் சம்பா சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

கடல் சீற்றம்

நம்பியார் நகர் சுனாமி குடியிருப்பில் ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. மேலும் நாகை அக்கரைப்பேட்டை கருவாடு காயவைக்கும் தளத்திலும் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக கருவாடு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தயார் செய்யப்பட்ட கருவாடுகளை பாதுகாப்பாக வைத்துள்ளனர். நாகையில் நேற்று கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. 6 அடி முதல் 7 அடி உயரத்துக்கு கடல் அலை எழுந்து, கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் நம்பியார் நகரில் மேலும் ஒரு பைபர் படகு கடலில் மூழ்கியது. நிவர் மற்றும் புரெவி புயல்கள் அச்சுறுத்தலால், நாகை மீனவர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கடலுக்கு செல்லவில்லை. தங்களது விசைப்படகு மற்றும் பைபர் படகுகளை கடுவையாற்றிலும், கடற்கரை பகுதிகளிலும் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

வேதாரண்யம் கடலோர பகுதியான ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், கோடியக்கரை ஆகிய கடலோர கிராமங்களில் கடல் கடும் சீற்றமாக காணப்பட்டது. கடல் அலை 3 அடி உயரத்திற்கு மேல் எழுந்தது. இதனால் 3-வது நாளாக 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதை தொடர்ந்து 1500 பைபர் படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் மீன்பிடி சாதனங்களையும் பாதுகாக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆறுகாட்டுத்துறை கடல் சீற்றத்தால் கடற்கரையிலுள்ள மீன் இறங்கு கொட்டகைகளில் கடல் நீர் புகுந்தது. ஆறுகாட்டுத்துறை சுனாமி குடியிருப்பு பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அப்பகுதியில் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீர் வீடுகளில் புகும் அபாயம் உள்ளது. இதனால் வேதாரண்யம் நகராட்சி நிர்வாகத்தினர் மழைநீரை பொக்லின் எந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் பணிகளை மேற்கொள்ள அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை இயக்குனர் தலைமையில் 47 பேர் கொண்ட குழுவினர் வேதாரண்யத்தில் முகாமிட்டு தயார் நிலையில் உள்ளனர்.

அமைச்சர் ஆய்வு

ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், கோடியக்கரை ஆகிய மீனவ குடியிருப்புகளில் மழைநீரும், கடல் நீரும் சூழ்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அமைச்சர் ஓ.மணியன், மழைநீர் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது குடியிருப்பு பகுதியில் தேங்கி உள்ள மழை நீர் வடிவதற்கு ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மழை அளவு

நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8.30 மணியில் இருந்து நேற்று காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

வேதாரண்யம் 193, தலைஞாயிறு 141, நாகப்பட்டினம் 134, திருப்பூண்டி 129, மயிலாடுதுறை 122, சீர்காழி 99., மணல்மேடு 74, கொள்ளிடம் 71., தரங்கம்பாடி 54 என பதிவாகியுள்ளது.

Next Story