திருவாரூர் அருகே ஆற்று வெள்ளம் கிராமத்துக்குள் புகுந்தது


திருவாரூர் அருகே ஆற்று வெள்ளம் கிராமத்துக்குள் புகுந்தது
x
தினத்தந்தி 6 Dec 2020 2:18 AM GMT (Updated: 6 Dec 2020 2:18 AM GMT)

திருவாரூர் அருகே ஆற்று வெள்ளம் கிராமத்துக்குள் புகுந்தது.

திருவாரூர்,

திருவாரூர் அருகே கள்ளிக்குடி கிராமம் வழியாக சித்தாறு செல்கிறது. இந்த பகுதியின் மழைநீர் வடிகாலாக உள்ள சித்தாற்றில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த ஆற்றில் வெள்ளம் அதிக வேகத்துடன் செல்கிறது. இதனால் ஆற்றின் கரையையொட்டி உள்ள அடிப்புதுச்சேரி வடக்குவெளி என்ற இடத்தில் ஆற்றின் வெள்ளம் கரையை தாண்டி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இப்பகுதியில் அதிகமாக கூரை வீடுகள் உள்ளன. இந்த நிலையில் ஆற்று வெள்ளம் கிராமத்துக்குள் புகுந்துள்ளது. அங்கு 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் கிராம மக்கள் தங்களுடைய ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேடான பகுதிக்கு இடமாற்றம் செய்து வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்வதால் ஆற்றில் தண்ணீர் வேகம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த பகுதிக்கு செல்லும் வழியில் ஆறு உள்ளதால் குடியிருப்பு பகுதிகள் முழுமையாக முழ்கும் அபாயம் உள்ளதாக கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் புலிவலம்தேவா, தாசில்தார் நக்கீரன், வட்டார வளர்ச்சி அதிகாரி பாஸ்கர், வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார் ஆகியோர் அந்த பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

ஆற்று வெள்ளம் புகுந்ததை தொடர்ந்து கிராம மக்கள் கள்ளிக்குடி தகவல் மைய கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது. மழை தொடர்ந்து பெய்வதால் சித்தாற்றின் கரை பகுதியில் உள்ள அடிப்புதுச்சேரி, மணல்மேடு, பேட்டை தஞ்சாவூர், தென்ஓடாச்சேரி, காணூர், பாலியாபுரம், மாதா கோவில் தெரு உள்ளிட்ட 9 இடங்களை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

Next Story