27-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம்: மாவட்டம் முழுவதும் 7 ஆயிரம் லாரிகள் ஓடாது சங்க தலைவர் தகவல்


27-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம்: மாவட்டம் முழுவதும் 7 ஆயிரம் லாரிகள் ஓடாது சங்க தலைவர் தகவல்
x
தினத்தந்தி 23 Dec 2020 5:11 AM GMT (Updated: 23 Dec 2020 5:11 AM GMT)

வருகிற 27-ந்் தேதி முதல் நடைபெறும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால் தர்மபுரி மாவட்டம் முழுவதும் 7 ஆயிரம் லாரிகள் ஓடாது என்று லாரி உரிமையாளர் சங்க தலைவர் நாட்டான் மாது தெரிவித்தார்.

தர்மபுரி,

சரக்கு வாகனங்கள் மற்றும் லாரிகளில் ஜி.பி.எஸ். கருவி, வேக கட்டுப்பாட்டு கருவி மற்றும் டிஜிட்டல் ஸ்டிக்கர் ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட நிறுவனங்களில் இருந்து மட்டுமே வாங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதை கண்டித்தும், டீசல் விலை மற்றும் சுங்க கட்டண உயர்வை உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் வருகிற 27-ந்் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்தந்த மாவட்டங்களில் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் தொடர் வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக தர்மபுரி லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை தர்மபுரியில் நடந்தது. இதற்கு சங்க தலைவர் நாட்டான் மாது தலைமை தாங்கினார். செயலாளர் சையத் அப்சல், பொருளாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் ஜெமினி, வனராஜா உள்ளிட்ட லாரி உரிமையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். லாரி உரிமையாளர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

7000 லாரிகள் ஓடாது

தொடர்ந்து சங்க நிர்வாகிகள் தர்மபுரி ரெயில் நிலையம், பைபாஸ் ரோட்டில் அந்த வழியாக சென்ற லாரிகள் மற்றும் கனரக வாகனங்களில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு நோட்டீஸ் ஒட்டினர். மேலும் லாரி டிரைவர்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள். மாவட்டம் முழுவதும் தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக 7ஆயிரம் லாரிகள் ஓடாது.

இதனால் தினமும் ரூ.5 கோடி மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேக்கம் அடையும் சூழ்நிலை உருவாகும். சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுவார்கள். எனவே மத்திய, மாநில அரசுகள் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரி லாரி உரிமையாளர் சங்க தலைவர் நாட்டான் மாது தெரிவித்தார்.

Next Story