திருமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு மர்மம் இருப்பதாக உறவினர்கள் போராட்டம்


திருமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு மர்மம் இருப்பதாக உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 24 Dec 2020 5:33 PM GMT (Updated: 24 Dec 2020 5:33 PM GMT)

திருமங்கலம் அருகே வாலிபர் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே பெரிய ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் தங்கம். இவருடைய மகன் செல்வம் (வயது 22). பட்டதாரியான இவர் புளியங்குளத்தில் உள்ள தனியார் மினரல் வாட்டர் கம்பெனியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார். நேற்று காலை அவர் பணியில் இருந்தபோது மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

செல்வம் இறப்பு குறித்து தகவல் அறிந்ததும் அவருடைய உறவினர்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். பின்னர் அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி திருமங்கலத்தில் மதுரை-விருதுநகர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் திருமங்கலம் போலீஸ் துைண சூப்பிரண்டு வினோதினி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மறியலை கைவிட மறுத்த செல்வத்தின் உறவினர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். செல்வம் இறப்பு குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story