காங்கிரஸ் கட்சி 136-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் உறுதிமொழி ஏற்பு


காங்கிரஸ் கட்சி 136-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 29 Dec 2020 5:25 AM GMT (Updated: 29 Dec 2020 5:25 AM GMT)

காங்கிரஸ் கட்சியின் 136-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி நேற்று மார்த்தாண்டத்தில் காங்கிரஸ் கட்சி கொடியேற்றப்பட்டது. ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

குழித்துறை,

காங்கிரஸ் கட்சியின் 136-வது ஆண்டு தொடக்க விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மார்த்தாண்டத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மார்த்தாண்டம் பஸ் நிலையத்தின் முன்பு மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் குல்லா அணிந்து கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சி கொடியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஏற்றினார்.

பின்னர் காங்கிரசார் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

உறுதிமொழி

முன்னதாக உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியின் போது ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் 136-வது ஆண்டு தொடக்க விழாவில் தாதாபாய் நவுரோஜி, கோபாலகிருஷ்ண கோகலே, பாலகங்காதர திலகர், மோதிலால்நேரு, மகாத்மாகாந்தி, ஜவஹர்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் வல்லபாய் படேல், அபுல்கலாம் ஆசாத், பெருந்தலைவர் காமராஜர் மற்றும் காங்கிரஸ் தலைவர்களை இந்த நேரத்தில் நினைவு கூர்வோம் என்றார்.

நாகர்கோவிலில்...

நாகர்கோவிலில் வடசேரியில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் காந்தி பூங்கா வரை ஊர்வலமாகச் சென்றனர். இதற்கு மாவட்டத்தலைவர் ராதாகிரு‌‌ஷ்ணன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினர் குல்லா அணிந்திருந்தனர். ஊர்வலம் காந்தி பூங்காவை சென்றடைந்ததும், அங்குள்ள காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில் மணிமேடை சந்திப்பு பகுதியில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு நடந்த கொடியேற்று விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் பங்கேற்று கட்சிக் கொடி ஏற்றி வைத்தார்.

Next Story