ஞாபக மறதியால் 1 வாரத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய 98 வயது முதியவர், மகளிடம் ஒப்படைப்பு


ஞாபக மறதியால் 1 வாரத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய 98 வயது முதியவர், மகளிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 30 Dec 2020 3:58 AM GMT (Updated: 30 Dec 2020 3:58 AM GMT)

ஞாபக மறதியால் 1 வாரத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய 98 வயது முதியவர் மீட்கப்பட்டு கலெக்டர் உத்தரவின் பேரில் மகளிடம் ஒப்படைக்கப்பட்டார். கலெக்டரின் இந்த நடவடிக்கைக்கு பெண் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

தஞ்சாவூர்,

நாகை மாவட்டம் இலுப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 98). இவர், தஞ்சை மானோஜிப்பட்டியில் உள்ள தனது மகளின் வீட்டில் வசித்து வந்துள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பாக தனது மகள் வீட்டில் இருந்து ஞாபக மறதியால் வெளியேறி தஞ்சை பெரிய கோவில் அருகில் சுற்றி திரிந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று மிகுந்த உடல்நலக்குறைவு ஏற்பட்டு தஞ்சை நீதிமன்ற சாலையிலுள்ள பழைய மக்கள் தொடர்பு அலுவலகம் அருகில் அனாதையாக கிடந்தார். இது குறித்து கலெக்டர் கோவிந்தராவ் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து கலெக்டர் கோவிந்தராவ், உடனடியாக சமூக நலத்துறை மற்றும் ரெட்கிராஸ் அமைப்பிற்கு தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

மருத்துவமனையில் அனுமதி

அதனடிப்படையில் போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் முதியவர் மீட்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அன்று இரவே சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டது. சமூகநலத்துறை ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் தேவையான உணவும், உடையும் வழங்கப்பட்டது.

மருத்துவமனையில் முதியவருக்கு தனது ஊர் நாகை மாவட்டம் இலுப்பூர் என்பது மட்டுமே நினைவில் இருந்தது. அவரது புகைப்படத்தினை கொண்டு நாகை மாவட்ட சமூக நலத்துறை மற்றும் ரெட்கிராஸ் அமைப்பின் உதவியுடன் அவரது வீடு மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டது.

மகளிடம் ஒப்படைப்பு

மேலும் முதியவர் சுப்பிரமணியம் தஞ்சை மானோஜிப்பட்டியில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்ததும் தெரிய வந்தது. அதன் அடிப்படையில் நேற்று அவர் குணமடைந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மானோஜிபட்டியில் வசிக்கும் அவருடைய மகள் மலர்க்கொடி வீட்டில் ஒப்படைக்கப்பட்டார்.

தனது தந்தையை ஒரு வார காலமாக காணவில்லை என்று தேடியதாகவும், எங்கே சென்று க‌‌ஷ்டப்படுகிறார் என மனவேதனையில் இருந்ததாகவும் தற்போது மிகுந்த மன மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்த மலர்கொடி, தனது தந்தை கிடைக்க உதவி செய்த தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவுக்கு, கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Next Story