திருமணத்திற்கு மறுத்ததால் பயங்கரம் அரசு ஆஸ்பத்திரி பெண் ஊழியர் படுகொலை வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபர் கைது


திருமணத்திற்கு மறுத்ததால் பயங்கரம் அரசு ஆஸ்பத்திரி பெண் ஊழியர் படுகொலை வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபர் கைது
x
தினத்தந்தி 31 Dec 2020 1:51 AM GMT (Updated: 31 Dec 2020 1:51 AM GMT)

பெலகாவியில் திருமணத்திற்கு மறுத்த அரசு ஆஸ்பத்திரி பெண் ஊழியரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பெலகாவி, 

பெலகாவி மாவட்டம் பைலஒங்கலா தாலுகா மோகுபசவதா கிராமத்தை சேர்ந்தவர் சுதாராணி (வயது 27). இவருக்கும் கானாப்புரா தாலுகா மவுனாட்டியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடந்து இருந்தது. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்து இருந்தது. இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக பிறந்த 9 மாதங்களில் அந்த குழந்தை இறந்தது.

இதையடுத்து சுதாராணிக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கணவரை பிரிந்த சுதாராணி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். மேலும் பெலகாவி டவுனில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரியான பிம்சிலும் சுதாராணி ஊழியராக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் சுதாராணிக்கும், மோகுபசவதா கிராமத்தை சேர்ந்த ஈரண்ணா (26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஈரண்ணாவிடம், சுதாராணி நட்பாக பழகி வந்ததாக தெரிகிறது. ஆனால் ஈரண்ணா, சுதாராணியை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுதாராணியிடம் தனது காதலை வெளிப்படுத்திய ஈரண்ணா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார். ஆனால் காதலை ஏற்க மறுத்த சுதாராணி, ஈரண்ணாவை திருமணம் செய்யவும் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஈரண்ணா அடிக்கடி சுதாராணியிடம் தகராறு செய்து வந்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆஸ்பத்திரியில் இரவு பணிக்கு சுதாராணி சென்றார். நேற்று காலை பணி முடிந்ததும் ஆஸ்பத்திரி வளாகத்தில் சுதாராணி நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஈரண்ணா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சுதாராணியிடம் கேட்டு உள்ளார். ஆனால் அப்போதும் திருமணத்திற்கு சுதாராணி மறுத்துவிட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஈரண்ணா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சுதாராணியை சரமாரியாக வெட்டினார். இதில் கழுத்தில் பலத்த வெட்டுகாயம் அடைந்த சுதாராணி பரிதாபமாக இறந்தார். இதனை பாா்த்து அதிர்ச்சி அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஈரண்ணாவை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் அரிவாளை காட்டி தன்னை பிடிக்க வந்தவர்களை மிரட்டி கொண்டு இருந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஏ.பி.எம்.சி. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஈரண்ணாவை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் சுதாராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் திருமணத்திற்கு மறுத்ததால் சுதாராணியை, ஈரண்ணா கொலை செய்தது தெரியவந்தது. கைதான ஈரண்ணா மீது ஏ.பி.எம்.சி. போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். திருமணத்திற்கு மறுத்த ஆஸ்பத்திரி பெண் ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெலகாவியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story