சிகிச்சை அளிப்பதாக கூறி கடத்தப்பட்ட வாலிபர் மீட்பு; ஒருவர் கைது


சிகிச்சை அளிப்பதாக கூறி கடத்தப்பட்ட வாலிபர் மீட்பு; ஒருவர் கைது
x
தினத்தந்தி 31 Dec 2020 3:57 AM GMT (Updated: 31 Dec 2020 3:57 AM GMT)

சிகிச்சை அளிப்பதாக கூறி மனநலம் பாதித்த வாலிபரை கடத்தி பணம் பறித்தவரை போலீசார் மடக்கி பிடித்தனர். கடத்தப்பட்ட வாலிபர் பிச்சை எடுக்க ஈடுபடுத்தப்பட்டாரா? என போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

திங்கள்சந்தை,

குமரி மாவட்டம் சுங்கான்கடை குலாலர் தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ். இவருடைய மனைவி செல்வி. இவர்களுடைய மகன் சரவணன் (வயது 20), மனநலம் பாதித்தவர்.

சரவணன் அந்த பகுதியில் உள்ள சாலையோரத்தில் சுற்றி திரிவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த சண்முகம் (48) எதேச்சையாக அந்த பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. சாலையில் சுற்றி திரிவதை பார்த்த சரவணனை அவர் அக்கறையுடன் நலம் விசாரித்தார். பின்னர் அவருடைய வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் ஒப்படைத்தார். மேலும், சரவணனுக்கு கவுன்சிலிங்கும், உரிய சிகிச்சையும் கொடுத்தால் மனநிலை பாதிப்பில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு வந்து விடுவார் என ஆசைவார்த்தைகள் கூறினார்.

சிகிச்சை

மேலும் அதற்கு ரூ.1 லட்சம் செலவாகும் என தெரிவித்துள்ளார். இதனை சரவணனின் பெற்றோர் முழுமையாக நம்பினர். இதனை தொடர்ந்து சரவணனை, சண்முகம் கல்லிடைக்குறிச்சிக்கு சிகிச்சைக்குஅழைத்து செல்வதாக கூறி சென்றார்.

இந்தநிலையில் சண்முகம் ஒரு வங்கியின் கணக்கு எண்ணை சரவணனின் பெற்றோரிடம் கொடுத்து, அதில் பணம் செலுத்துமாறு கூறியுள்ளார். தங்களது மகன் முழுமையாக குணமடைய வேண்டும் என நினைத்த அவர்கள், அந்த வங்கி கணக்கில் ரூ.75 ஆயிரம் செலுத்தினர்.

ரூ.75 ஆயிரம் தர வேண்டும்

இதற்கிடையே கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் சரவணனை, பார்க்க முடியாமலும், தொடர்பு கொள்ள முடியாமலும் பெற்றோர் தவித்தனர். அதே சமயத்தில் மீண்டும் ரூ.75 ஆயிரம் தர வேண்டும் என இருவரையும் செல்போனில் தொடர்பு கொண்டு சண்முகம் வற்புறுத்தியதாக தெரிகிறது.

அதன்பிறகு தான் சண்முகத்தின் சுயரூபம் வெளியே தெரிய ஆரம்பித்தது. அதாவது, மகனை பார்க்க வேண்டும் என்று சரவணனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். அதற்கு, ரூ.75 ஆயிரம் கொடுத்தால் மகனை பார்க்க முடியும், இல்லையென்றால் முடியாது என மிரட்டும் தொணியில் பேசியதாக தெரிகிறது.

சுற்றி வளைத்து பிடித்தனர்

இதுகுறித்து செல்வி இரணியல் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் முத்துராஜ் விசாரணை நடத்தினார். பின்னர் சண்முகத்தை பொறி வைத்து பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். போலீசார் அறிவுரையின் பேரில் சரவணன் பெற்றோர், அந்த பணத்தை தருவதாக சண்முகத்திடம் கூறி, அவரை காவல்கிணறு சந்திப்பிற்கு வருமாறு அழைத்தனர்.

அதன்படி இரணியல் போலீசார் சரவணனின் பெற்றோருடன் காவல்கிணறு சந்திப்புக்கு சென்று தயார் நிலையில் மறைந்திருந்தனர். போலீசாரின் திட்டத்தை அறியாத சண்முகம், மனநலம் பாதித்த வாலிபருடன் அங்கு வந்தார்.

உடனே, அங்கு மறைந்திருந்த போலீசார் சண்முகத்தை சுற்றி வளைத்து பிடித்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து சரவணனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கைதான சண்முகம் எம்.எஸ்.சி. சைக்காலஜி முடித்தவர் என்று தெரிகிறது.

தீவிர விசாரணை

மனநலம் பாதித்த வாலிபரை சண்முகம் எங்கு வைத்திருந்தார்? அவரை பிச்சை எடுக்க வைத்தாரா? இதேபோல் வேறு யாரிடமாவது பணம் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா?, சண்முகத்தின் பின்னணியில் ஏதேனும் கும்பல் செயல்படுகிறதா? என பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரணை நடந்து வருகிறது.

சிகிச்சை அளிப்பதாக கூறி மனநலம் பாதித்த வாலிபரை நூதன முறையில் கடத்தி பணம் பறித்ததாக ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story