சமூகநீதி பற்றி பேச தி.மு.க.வுக்கு அருகதை கிடையாது பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் பேச்சு


சமூகநீதி பற்றி பேச தி.மு.க.வுக்கு அருகதை கிடையாது பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் பேச்சு
x
தினத்தந்தி 4 Jan 2021 4:46 AM GMT (Updated: 4 Jan 2021 4:46 AM GMT)

சமூகநீதி பற்றி பேசுவதற்கு தி.மு.க.வுக்கு அருகதை கிடையாது என்று பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் கூறி்னார்.

வாலாஜா,

வாலாஜாபேட்டையை அடுத்த சுங்கச்சாவடி அருகே அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பா.ஜ.க. அணிகள் மற்றும் பிரிவு பிரதிநிதிகள் மாநாடு நடந்தது. மாநாட்டில் பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

எழுச்சியோடு உள்ளது

பா.ஜ.க. தமிழகம் முழுவதும் எழுச்சியோடு உள்ளது. சிறு கிராமங்கள் முதல் நகரங்கள் வரை உள்ளவர்கள் தங்களை பா.ஜ.க.வில் இணைத்து வருகின்றனர். காங்கிரஸ் மற்றும் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் விளைபொருட்களை தாங்கள் விரும்பியபடி விற்பனை செய்து கொள்ளலாம், வெளி மாநிலங்களிலும் சுதந்திரமாக விற்பனை செய்யலாம் என சட்டத்திருத்தம் கொண்டு வருவோம் என்றனர்.

அந்த சட்ட திருத்தத்தைதான் பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். தி.மு.க. தேர்தல் அறிக்கையை நிறைவேற்றியது பாரதீய ஜனதா தான். விவசாயிகளுக்கு நல்லது நடக்க கூடாது, விவசாயிகள் பொருளாதாரத்தில் மேம்படக்கூடாது என தி.மு.க. நினைகிறது.

அருகதை கிடையாது

தி.மு.க. என்றால் கமிஷன், ஊழல், பொய் பிரசாரம் என்று அர்த்தம். சமூக நீதி பற்றி பேசுவதற்கு தி.மு.க.வுக்கு எந்த ஒரு அருகதையும் கிடையாது. ஸ்டாலின் கூட்டத்தில் பெண் தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது குறித்து எந்த ஒரு கட்சியும் கண்டுகொள்ளவில்லை. பாரதீய ஜனதா அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் முதல்-அமைச்சரை அரியணையில் ஏற்றுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story