மும்பையில் 9 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி; மேயர் தகவல்

மும்பையில் இன்று 9 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுவதாக மேயர் கிஷோரி பெட்னேகர் கூறினார்.
9 மையங்கள்
நாடு முழுவதும் இன்று (சனிக்கிழமை) முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளது. இதில் மும்பையில் சுகாதாரப்பணியாளர்களுக்கு செலுத்துவதற்காக கடந்த புதன் கிழமை அதிகாலை 1 லட்சத்து 39 ஆயிரத்து 500 டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து புனேயில் இருந்து வந்தது. அந்த தடுப்பு மருந்து பரேலில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் அவை நேற்று மும்பையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேயர் கிஷோரி பெட்னேகர் பூஜை செய்து தடுப்பு மருந்தை வேன்கள் மூலம் மையங்களுக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் அவர் கூறும்போது, "தடுப்பு மருந்துகள் மும்பையில் உள்ள 9 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அங்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக ஏற்கனவே 5 ஆயிரம் பேருக்கு பயிற்சி வழங்கி உள்ளோம். மேலும் 5 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது " என்றார்.
புனேயில் 800 பேர்
இதேபோல புனேயில் இன்று 800 சுகாதாரப்பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளதாக மேயர் முரளிதர் மகோல் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " தடுப்பு மருந்து செலுத்தும் தொடக்க விழா கமலா நேரு ஆஸ்பத்திரியில் நடக்கிறது. முதல் நாளில் 800 சுகாதாரப்பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்படும். அவர்கள் மருந்து செலுத்தப்பட்ட பிறகு 30 நிமிடங்கள் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் " என்றார்.
Related Tags :
Next Story