விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி தாசில்தாரிடம் மனு அளிக்கும் போராட்டம்


விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி தாசில்தாரிடம் மனு அளிக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 20 Jan 2021 9:01 PM GMT (Updated: 20 Jan 2021 9:01 PM GMT)

விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி தாசில்தாரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடந்தது.

திருவாரூர்,

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தாசில்தாரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் செந்தில் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிவேல், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர்கள் கோபிராஜ், சேகர், நிர்வாகிகள் சண்முகம், ஜோதிபாசு, ஹரிசுர்ஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனுவை துணை தாசில்தார் சந்திரமோகனிடம் வழங்கினர்.

நீடாமங்கலம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நீடாமங்கலம் ஒன்றிய தலைவர் பூசாந்திரம் தலைமையில் தாசில்தாரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கலியபெருமாள், கட்சியின் ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரி தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தாசில்தாரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க திருவாரூர் மாவட்ட பொருளாளர் சாமிநாதன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஜெயபிரகாஷ், ஒன்றிய செயலாளர் மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜோதிபாசு, நகர செயலாளர் ரகுராமன், ஒன்றிய செயலாளர் மார்க்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு திருத்துறைப்பூண்டி துணை தாசில்தார் வசுமதியிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

முத்துப்பேட்டை

முத்துப்பேட்டை அருகே தில்லைவிளாகம் கிராம நிர்வாக அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இதில் விவசாய தொழிலாளர் சங்க முன்னாள் ஒன்றிய செயலாளர் கனகசுந்தரம் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டு கிராம நிர்வாக அதிகாரியிடம் மனு அளித்தனர். இடும்பாவனம் கிராம நிர்வாக நிர்வாக அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் வீரசேகரன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய துணைத் தலைவர் ராஜேந்திரன் மற்றும் பலர் மனு அளித்தனர்.

Next Story