கற்போம் எழுதுவோம் திட்டத்தில், முதியோருக்கு தரையில் உட்கார்ந்து பாடம் கற்பித்த முதன்மை கல்வி அதிகாரி


கற்போம் எழுதுவோம் திட்டத்தில், முதியோருக்கு தரையில் உட்கார்ந்து பாடம் கற்பித்த முதன்மை கல்வி அதிகாரி
x
தினத்தந்தி 21 Jan 2021 5:54 PM GMT (Updated: 21 Jan 2021 5:54 PM GMT)

கற்போம் எழுதுவோம் திட்டத்தில் படித்து வரும் முதியோருக்கு தரையில் உட்கார்ந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாடம் நடத்தினார்.

ஈரோடு,

மத்திய அரசின் வயது வந்தோர் கல்வி திட்டமான கற்போம் எழுதுவோம் திட்டம் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. 15 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆண்-பெண்களும் எழுத படிக்கும் வகையில் இந்த திட்டம் இயங்குகிறது.

ஈரோடு மாவட்டத்தில் 678 அரசு பள்ளிக்கூடங்கள் கற்போம் எழுதுவோம் திட்ட மையங்களாக செயல்படுகின்றன. இங்கு குறைந்த பட்சம் 20 பேர் என்ற வகையில் 13 ஆயிரத்து 778 பேர் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு எழுத்து கற்பிக்க ஊதியம் இல்லாத வகையில் தன்னார்வலர்கள் மையத்துக்கு தலா ஒருவர் வீதம் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கற்றுக்கொடுத்தார்

இந்த திட்டம் மிகவும் சிறப்பாக செயல்பட தன்னார்வலர்கள் மட்டுமின்றி அனைத்து ஆசிரிய-ஆசிரியைகள், கல்வித்துறை அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வேண்டுகோள் விடுத்து உள்ளார். கற்போம் எழுதுவோம் திட்டத்தில் ஒழுங்காக பள்ளிக்கூடங்களுக்கு வராதவர்கள் இருந்தால் அவர்கள் இருக்கும் பகுதிகளுக்கே சென்று கற்பிக்க வேண்டும் என்று அவர் ஏற்கனவே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பவானி வட்டாரத்தில் கற்போம் எழுதுவோம் திட்ட செயல்பாடுகள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.

மாலை நேரத்தில் அவர் வீதி வீதியாக சென்று திட்டத்தில் இணைந்து உள்ள முதியோரை சந்தித்து பாடங்கள் குறித்து கேட்டு அறிந்தார். அவர் ஒரு வீதியில் சென்றபோது அங்கு கூடி இருந்த முதியோர்கள் மத்தியில் தரையில் உட்கார்ந்து எழுத்துக்கூட்டி, பாடங்களை கற்றுக்கொடுத்தார்.

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியே முன் உதாரணமாக தரையில் உட்கார்ந்து எழுத்து அறிவு இல்லாதவர்களுக்கு கற்றுக்கொடுத்து மற்ற அதிகாரிகளையும் கற்பித்தல் பணியை சிறப்பாக செய்ய தூண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story