விஷம் குடித்த தொழிலாளிக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி உறவினர்கள் சாலை மறியல்


விஷம் குடித்த தொழிலாளிக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 21 Jan 2021 11:51 PM GMT (Updated: 21 Jan 2021 11:51 PM GMT)

விழுப்புரம் அருகே விஷம் குடித்த தொழிலாளிக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கல்வீசி தாக்கி் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள மோட்சகுளம் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் சுரேஷ் (வயது 26), கூலித்தொழிலாளி. குடும்ப பிரச்சினை காரணமாக இவர் நேற்று காலை விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக சுரேசை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள சிறுவந்தாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர் இல்லாததால் அங்கிருந்த செவிலியர்கள், அவருக்கு முதலுதவி அளித்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அங்கு டாக்டரும் வந்து சுரேசுக்கு முதலுதவி அளித்தார். அதன்பிறகு சுரேஷ் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

உறவினர்கள் சாலை மறியல்

இதனிடையே சுரேசுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி அவரது உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் காலை 10.30 மணியளவில் சிறுவந்தாடு மெயின்ரோட்டில் அமர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சிறுவந்தாடு- மடுகரை சாலையில் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் மறியலை கைவிடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், சிறுவந்தாடு கலைஞர் நகர் உள்ளிட்ட மற்ற தெருக்கள் பகுதி வழியாக வாகனங்கள் செல்ல போலீசார் ஏற்பாடு செய்தனர். தொடர்ந்து, பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் இங்கு வந்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினர்.

ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு

இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் வர தாமதமானது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், திடீரென சிறுவந்தாடு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி சேதமடைந்தது.

இதனிடையே விழுப்புரம் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், சிறுவந்தாடுக்கு நேரில் சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சிறுவந்தாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் சரிவர பணியில் இருப்பதில்லை, உரிய நேரத்தில் பொதுமக்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதில்லை, 108 ஆம்புலன்ஸ் சேவை வசதியும் இல்லை, வெண்டிலேட்டர் வசதி உள்ளிட்ட உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களும் இல்லை, எதற்கெடுத்தாலும் மேல்சிகிச்சைக்காக பரிந்துரை செய்கின்றனர், எனவே அனைத்து உயிர் காக்கும் மருத்துவ வசதிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதை கேட்டறிந்த சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்துவது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார். அதன் பிறகு பொதுமக்கள் அனைவரும் மதியம் 1 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story