பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்கு அனுப்பும் வரை உழைக்க வேண்டும் பூத் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முருகன் பேச்சு


பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்கு அனுப்பும் வரை உழைக்க வேண்டும் பூத் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முருகன் பேச்சு
x
தினத்தந்தி 22 Jan 2021 12:57 AM GMT (Updated: 22 Jan 2021 12:57 AM GMT)

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்கு அனுப்பும் வரை உழைக்க வேண்டும் என்று பூத் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் மாநில தலைவர் முருகன் பேசினார்.

நாகர்கோவில்,

பா.ஜனதா கட்சியின் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பூத் பொறுப்பாளர்கள் கூட்டம் நாகர்கோவில் வடசேரி வஞ்சியாதித்தன் தெருவில் நேற்று இரவு நடந்தது. சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கோபகுமார் தலைமை தாங்கினார். நாகர்கோவில் வடக்கு மாநகர தலைவர் அஜித்குமார் வரவேற்று பேசினார்.

கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, மாநில தலைவர் எல்.முருகன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன், மண்டல பொறுப்பாளர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மாநில தலைவர் எல்.முருகன் பேசும்போது, தி.மு.க.வுக்கு தேர்தலில் தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் இந்துகளுக்கு அரணாக இருப்பதாக கூறுகிறார்கள். எங்களுடைய காவிக்கூட்டம், கருப்புக்கூட்டமாகிய உங்களை தமிழகத்தை விட்டே விரட்டி அடிக்கும். எப்போது தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் இருந்து எம்.பி.யை நாடாளுமன்றத்துக்கும், எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்கும் அனுப்பி வைக்க வேண்டும். அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். அதுவரை நமக்கு ஓய்வில்லை என்றார்.

லட்சியத்துடன்...

பா.ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி பேசும்போது, பிரதமர் மோடி தமிழ் மொழி மீதும், தமிழக மக்கள் மீதும் மிகுந்து அன்பும், பற்றும் கொண்டுள்ளார். அதனால் அதிகமான நிதியையும், அதிகமான திட்டங்களையும் தமிழகத்துக்கு கொடுத்து வருகிறார். ஒவ்வொரு பூத்தில் வெற்றி பெற்றால்தான் தொகுதியில் வெற்றி பெற முடியும். அதனால் ஒவ்வொருவரும் உங்கள் பூத்தில் தாமரைக்கு அதிகப்படியான வாக்குகளை பெற்றுத்தர வேண்டும். அதன்மூலம் பா.ஜனதா வெற்றி பெற்றே தீரும் என்றார்.

இவருடைய இந்தி மொழியிலான பேச்சை மாநில செயலாளர் உமாரதி ராஜன் தமிழில் மொழி பெயர்த்தார்.

கட்சியில் இணைந்தனர்

கூட்டத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, மாவட்ட தலைவர் தர்மராஜ், துணைத்தலைவர் தேவ், பொருளாளர் முத்துராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் விசு நன்றி கூறினார்.

முன்னதாக கூட்டத்தில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், விளையாட்டு வீரர்களும் பா.ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

Next Story