மூடப்பட்ட என்.டி.சி. மில்களை திறக்க வேண்டும்; கோவைக்கு வந்த நாடாளுமன்ற குழுவிடம் தொழிற்சங்கத்தினர் கோரிக்கை


கோவை வந்த நாடாளுமன்ற குழுவிடம் அனைத்து தொழிற்சங்கத்தினர் மனு அளிக்க வந்தபோது எடுத்த படம்
x
கோவை வந்த நாடாளுமன்ற குழுவிடம் அனைத்து தொழிற்சங்கத்தினர் மனு அளிக்க வந்தபோது எடுத்த படம்
தினத்தந்தி 22 Jan 2021 1:32 AM GMT (Updated: 22 Jan 2021 1:32 AM GMT)

மூடப்பட்ட என்.டி.சி. மில்களை திறந்து இயக்க வேண்டும் என்று கோவை வந்த நாடாளுமன்ற தொழிலாளர் நிலைக்குழுவிடம் தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

நாடாளுமன்ற குழு
பத்ருகவி எம்.பி. தலைமையிலான நாடாளுமன்ற தொழிலாளர் நிலைக்குழு கோவை வந்தது. அந்த குழுவில் எம்.பி.க்கள் கே.சுப்பராயன், மு.சண்முகம், கரீம் உள்பட 15 பேர் இடம் பெற்றுள்ளார்கள். அந்த குழுவிடம் கோவையில் உள்ள பஞ்சாலைத் தொழிலாளர் தொழிற்சங்க தலைவர்கள் ஐ.என்.டி.யூ.சி., துணைப் பொதுச் செயலாளர் வி.ஆர்.பாலசுந்தரம், ஏ.ஐ.டி.யு.சி. பொதுச் செயலாளர் எம்.ஆறுமுகம், சி.சிவசாமி, எச்.எம்.எஸ். தலைவர் டி.எஸ்.ராஜாமணி, பி.கோவிந்தராஜன், சி.ஐ.டி.யு. தலைவர் சி.பிரான்சிஸ் சேவியர், எம்.எல்.எப். தலைவர் எம்.தியாகராஜன் ஆகியோர் மனு அளித்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மூடப்பட்ட மில்கள்
இந்தியாவில் உள்ள 23 என்.டி.சி. மில்களில் 7 மில்கள் தமிழகத்தில் உள்ளன. இதில் 13 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டு முதல் இந்த 7 மில்களும் இயக்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கோவையில் உள்ள ரங்க விலாஸ் மில், காளையார்கோவிலில் உள்ள காளீஸ்வரா மில்கள் மட்டும் செயல்பட்டு வருகிறது. மற்ற மில்கள் இயக்கப்பட வில்லை. இதனால் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களுக்கு தற்போது 50 சதவீத சம்பளம் வழங்கப்படுகிறது.

எனவே, மூடப்பட்டுள்ள மில்களையும் திறந்து தொடர்ந்து இயக்க வேண் டும். இதற்கான நிதி என்.டி.சி. நிறுவனத்திடமே உள்ளது. மேலும் மராட்டி யத்தில் அம்பேத்கர் நினைவிடம் கட்டுவதற்காக பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான இடத்தை வழங்கிய வகையில் ரூ.1,500 கோடி உள்ளது. புதுச்சேரி அரசு ரூ.35 கோடி பஞ்சாலை கழகத்திற்கு வழங்க வேண்டி உள்ளது.

திறக்க வேண்டும்
எனவே, இந்த நிதியை வைத்தே தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்த மான மில்களை தொடர்ந்து நல்ல முறையில் இயக்க முடியும். இதனால் தொழிலாளர்களும் பயன்பெறுவர் அரசுக்கும் வருமானம் கிடைக்கும். எனவே, என்.டி.சி. மில்களை திறந்து தொடர்ந்து இயக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேயிலை தொழிலாளர்கள்
ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., எம்.ஆறுமுகம் கொடுத்துள்ள மற்றொரு மனுவில், வால்பாறையில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களின் தினக்கூலியை ரூ.600- ஆக உயர்த்த வேண்டும். தற்போது வால்பாறையில் உள்ள தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.335 வழங்கப்படுகிறது.

ஆனால் கேரளாவில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ. 403 சம்பளமாக வழங்கப்படுகிறது. இது மிகப்பெரிய பாரபட்சமாகும். எனவே தோட்ட தொழிலாளர்களிடம் உள்ளூர் வரி என்ற பெயரில் உள்ளாட்சி அமைப்பால் வரி வசூலிக்கப்படுகிறது. அதை தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களிடம் சம்பளத்தில் பிடித்தம் செய்து கொடுக்கிறது. இதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Next Story