கோவை வடவள்ளியில் பர்னிச்சர் குடோனில் தீ விபத்து; ரூ.6 கோடி பொருட்கள் எரிந்து நாசம்


பர்னிச்சர் குடோனில் தீப்பிடித்ததால் கரும்புகை சூழ்ந்து நின்றதை படத்தில் காணலாம்.
x
பர்னிச்சர் குடோனில் தீப்பிடித்ததால் கரும்புகை சூழ்ந்து நின்றதை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 22 Jan 2021 1:53 AM GMT (Updated: 22 Jan 2021 1:53 AM GMT)

கோவை வடவள்ளியில் பர்னிச்சர் குடோனில் தீப்பிடித்ததில் ரூ.6 கோடி பொருட்கள் எரிந்து நாசமானது.

பர்னிச்சர் குடோன்
கோவை வடவள்ளியில் தக்சா பிராப்பர்ட்டி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் பர்னிச்சர் ஷோரூம் அவிஷ்கார் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இங்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டு பர்னிச்சர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இங்கு விற்பனை செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் கோவை வடவள்ளி- தொண்டாமுத்தூர் ரோட்டில் லட்சுமி நகர் அருகே உள்ள குடோனில் வைக்கப்பட்டு இருந்தன.

தீப்பிடித்தது
இந்த நிலையில் நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் குடோனில் திடீரென்று தீப்பிடித்தது. பின்னர் அந்த தீ மளமளவென பிற பகுதிகளுக்கும் பரவியது. அங்கு இருப்பது பர்னிச்சர் பொருட்கள் என்பதால் எளிதில் அனைத்து இடங்களுக்கும் தீ பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதுமே கரும்புகையாக காட்சியளித்தது.

இது குறித்து தகவல் அறிந்த கோவை தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

ரூ.6 கோடி பொருட்கள் நாசம்
இந்த தீ விபத்தில் குடோனுக்குள் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. அதன் மதிப்பு ரூ.6 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. மின்கசிவே தீ விபத்துக்கு காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. எனினும் இந்த தீ விபத்து குறித்து வடவள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story