தொடர் மழையிலும் தாக்குப்பிடிக்கும் புதிய நெல் ரகங்கள் கலெக்டர் வலியுறுத்தல்


தொடர் மழையிலும் தாக்குப்பிடிக்கும் புதிய நெல் ரகங்கள் கலெக்டர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Jan 2021 12:17 AM GMT (Updated: 23 Jan 2021 12:17 AM GMT)

தொடர் மழையிலும் தாக்குப்பிடிக்கும் வகையில் புதிய நெல் ரகங்களை கண்டுபிடிக்குமாறு கலெக்டர் அர்ஜூன்சர்மா வலியுறுத்தினார்.

காரைக்கால்,

காரைக்காலை அடுத்த செருமாவிலங்கை கிராமத்தில் பண்டித ஜவகர்லால் நேரு அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் (பஜன்கோவா) செயல்பட்டு வருகிறது. இங்கு 4 ஆண்டு கால விவசாய இளங்கலை வேளாண் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு, பாடத்திட்டத்தின் ஓர் அங்கமாக, நேரடி களப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக, காரைக்காலில் 23 மாணவ, மாணவிகளும், மற்ற பகுதிகளில் 98 மாணவர்களும் அந்தந்த பகுதியில் களபயிற்சி மேற்கொண்டனர். அப்போது விவசாயிகளிடம் கண்டுபிடித்த, பாரம்பரிய தொழில்நுட்பங்களின் ஒரு நாள் வேளாண் கண்காட்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கண்காட்சிக்கு கல்லூரி முதல்வர் ஷமராவ் ஜஹாகிரிதர் தலைமை தாங்கினார். வேளாண் பொருளியல் மற்றும் விரிவியல் துறை தலைவர் புஷ்பராஜ் முன்னிலை வகித்தார். பேராசிரியர் ஆனந்தகுமார் அறிமுக உரையாற்றினார்.

கண்காட்சியை கலெக்டர் அர்ஜூன்சர்மா தொடங்கி வைத்து பேசியதாவது:-

புதிய வகை நெல் ரகம்

சமீபகாலமாக தொடர் மழையால் நீரில் மூழ்கி நெற்பயிர்கள் அழுகி வருகின்றன. இதுபோல் விவசாயிகளின் உழைப்பு வீணாவதை ஏற்க முடியவில்லை. மழை, வெள்ளத்தினால் நெற்பயிர்கள் வயலில் சாயாமல், தாக்குப்பிடிக்கும் வகையில் புதியவகை நெல் ரகங்களை கண்டறிய மாணவர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் முன்வர வேண்டும்.

விவசாயிகளின் பாரம்பரிய தொழில் நுட்பங்களை ஆவணமாக்கி, காப்புரிமை போன்ற ஆதாய உரிமைகளை பெறலாம். கடந்த 4 மாதமாக களபயிற்சி மேற்கொண்டு, தங்கள் அனுபவங்களையும், விவசாயிகளின் உழைப்பையும் கண்காட்சியாக்கிய, பேராசிரியர், மாணவர்களை மனதார பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கண்காட்சியில் விவசாயிகள் கண்ணபிரான், கமலா, ஆறுமுகம், குருமூர்த்தி, மோகனசுந்தரம், டொனால்டு வில்பிரட், முரளி, விக்னேஷ் ஆகியோர் 200-க்கும் மேற்பட்ட பொருட்களை வைத்திருந்தனர். முன்னதாக மாணவிகள் இந்துஜா மற்றும் மஹாத்தி வரவேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை துணை பேராசிரியர்கள் அருட்செல்வம், சரவணன், சிவசக்திதேவி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் மாணவர்கள் நாவரசு, வலூரி அவினாஷ் ஆகியோர் நன்றி கூறினர்.

Next Story