செங்கல்பட்டு மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம்


செங்கல்பட்டு மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 24 Jan 2021 11:25 PM GMT (Updated: 24 Jan 2021 11:25 PM GMT)

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றியத்தில் உள்ள ஊரப்பாக்கம் ஊராட்சி வி.பி.கே. நகர் பகுதியில் தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆராமுதன் தலைமை தாங்கினார். ஊரப்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வம், கிளை செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட செயலாளருமான தா.மோ. அன்பரசன், காஞ்சீபுரம் எம்.பி. செல்வம், செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் நீண்ட காலமாக புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். ஊராட்சியில் பல்வேறு பகுதியில் குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், தெருவிளக்கு, சாலை வசதிகள் செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு எம்.எல்.ஏ. தி.மு.க. ஆட்சி வந்தவுடன் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார். இதில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில் உள்ள கன்னிவாக்கம் கிராமத்தில் தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.எஸ்.ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் இளங்கோவன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story