மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகை


மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 31 Jan 2021 5:39 AM GMT (Updated: 31 Jan 2021 5:39 AM GMT)

நெல்லை மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை நேற்று தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

நெல்லை:
நெல்லை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வீடுகள் தோறும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. காலை நேரத்தில் தூய்மை பணியாளர்கள் தெருக்களில் சென்று பொதுமக்கள் கொடுக்கும் குப்பைகளை சேகரித்து குப்பை கிடங்கிற்கு அனுப்பி வைக்கிறார்கள். மேலப்பாைளயம் பகுதியில் இதுபோல வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை, மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் லாரிகள் மூலம் ராமையன்பட்டி குப்பை கிடங்கில் கொட்டி வந்தனர். இந்த குப்பைகளை ராமயன்பட்டி குப்பை கிடங்கில் கொட்டுவதற்கு அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை.
இதனால் கண்காணிப்பு மேற்பார்வையாளர்கள், வீடுகளில் வாங்கும் குப்பைகளை அந்தந்த பகுதியில் கொட்டுவதற்கு உத்தரவிட்டனர். ஆனால் இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் உரிய உத்தரவு பிறப்பிக்க வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் நேற்று காலை மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை முற்றுைகயிட்டனர். நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. தலைவர் மோகன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். தகவல் அறிந்ததும் அதிகாரிகள், தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்று பணியில் ஈடுபட்டனர். இதனால் காலை நேரத்தில் வீடுகளில் குப்பை சேகரிக்கும் பணி பாதிக்கப்பட்டது.

Next Story