மத்திய பட்ஜெட்டில் தமிழக நெடுஞ்சாலைகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதால் வேலைவாய்ப்புகள் உருவாகும் எல்.முருகன் பேட்டி


மத்திய பட்ஜெட்டில் தமிழக நெடுஞ்சாலைகளுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதால் வேலைவாய்ப்புகள் உருவாகும் எல்.முருகன் பேட்டி
x
தினத்தந்தி 2 Feb 2021 3:25 AM GMT (Updated: 2 Feb 2021 3:25 AM GMT)

மத்திய பட்ஜெட்டில் தமிழக நெடுஞ்சாலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளதால் வேலைவாய்ப்புகள் உருவாகும் நிலை உள்ளதாக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

ஆலந்தூர்,

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் அனிதா. கூடைபந்து வீராங்கனையான இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்து உள்ளது. இதையடுத்து தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் நேற்று அனிதா வீட்டுக்கு நேரில் சென்று, அவருக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது அவருடன் நடிகை குஷ்பு, துணை தலைவர் ராஜன், மாவட்ட தலைவர் சாய்சத்யன் உள்பட நிர்வாகிகள் உடன் வந்தனர்.

பின்னர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வரலாற்று சிறப்பு மிக்கது

தமிழகத்தில் பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண் விருதுகள் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில் கூடைபந்து விளையாட்டில் சாதனை செய்த அனிதாவுக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு வழங்கி உள்ளது. இதற்காக தமிழக பா.ஜ.க. சார்பில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இன்று(அதாவது நேற்று) அறிவிக்கப்பட்ட பட்ஜெட், வரலாற்று சிறப்புமிக்கதாகும். தேசத்தின் வளர்ச்சியையும், தனி மனிதனின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது. தமிழக வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்புகள் பெருகும்

தமிழக தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க ரூ.1.13 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழக நெடுஞ்சாலைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளதன் மூலம் நிறைய தொழிற்சாலைகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் நிலை உள்ளது.

அனைத்து தரப்பு மக்களும் திருப்திபடும் வகையிலும், அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையிலும் சிறப்பான பட்ஜெட்டை தந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி ஆகியோருக்கு தமிழக பா.ஜ.க. சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story