ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா கொடியேற்றம் திரளான பக்தர்கள் தரிசனம்


ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா கொடியேற்றம் திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 2 Feb 2021 10:47 AM GMT (Updated: 2 Feb 2021 10:49 AM GMT)

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதி்ல் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஏரல்:

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

அருணாசலசாமி கோவில்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில்  ஆண்டுதோறும் தை அமாவாசை திருவிழா 12 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும்.
அதுேபால் இந்த ஆண்டிற்கான திருவிழா கோவில் வளாகத்தில்  இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தபாண்டியநாடார் கொடியேற்றினார். தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். இரவில் சப்பர பவனி நடந்தது. 

விழா நாட்களில் தினமும் இரவில் சாமி பல்வேறு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 

உருகு பலகை தரிசனம்

விழாவின் முக்கிய திருவிழா 11-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று மதியம் 1 மணிக்கு சாமி உருகு பலகை தரிசனம், சிறப்பு அபிஷேகம், மாலை 5 மணிக்கு இலாமிச்சைவேர் சப்பரத்தில் சேர்மதிருக்கோலக்காட்சி, இரவு 10 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கின்றது.

12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், மாலையில் ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாகசாந்தி, இரவு 10 மணிக்கு கோவில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்த காட்சி நடைபெறுகிறது.

ஊஞ்சல் சேவை

நிறைவு நாளான 13-ந் தேதி (சனிக்கிழமை) காலை தாமிரபரணி ஆற்றில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் சாமி நீராடல், மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவில் சாமி ஆலிலை சயன மங்கள தரிசனம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தபாண்டியநாடார் செய்து வருகிறார்.

Next Story