அரசு ஊழியர்கள் மறியல் போராட்டம்


அரசு ஊழியர்கள் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 2 Feb 2021 5:43 PM GMT (Updated: 2 Feb 2021 5:43 PM GMT)

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் மறியல் போராட்டம் பெண்கள் உள்பட 158 பேர் கைது செய்யப்பட்டனர்

தர்மபுரி:

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 158 பேரை போலீசார் கைது செய்தனர்.

மறியல் போராட்டம்

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேகர், மாநில துணைத்தலைவர் பழனியம்மாள், மாவட்ட பொருளாளர் புகழேந்தி, மாவட்ட துணைத்தலைவர் இளவேனில் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். 

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம், ஒப்பந்த ஊதியம் ஆகியவற்றை ரத்து செய்து வரையறுக்கப்பட்ட ஊதிய முறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். அகவிலைப்படி உள்ளிட்ட சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும்.

காலி பணியிடங்கள்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் அளிக்க வேண்டும். அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 

தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், கிராமப்புற நூலகர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 158 பேரை தர்மபுரி டவுன் போலீசார் கைது செய்தனர்.

Next Story