நெல்லையில் அரசு ஊழியர்கள் சாலை மறியல்; 50 பேர் கைது


நெல்லையில் அரசு ஊழியர்கள் சாலை மறியல்; 50 பேர் கைது
x
தினத்தந்தி 3 Feb 2021 1:09 AM GMT (Updated: 3 Feb 2021 1:11 AM GMT)

நெல்லையில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை,

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை திரும்பப்பெற வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். செயலாளர் துரைசிங், சாலை பணியாளர் சங்க நிர்வாகி செய்யது யூசுப்ஜான், மருத்துவ பணியாளர் சங்க நிர்வாகி பாஸ்கரன் ஸ்டான்லி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 50 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அங்குள்ள மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த மறியல் போராட்டத்தையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story