திருச்சி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: முன்னாள் ராணுவ வீரர் கைது


திருச்சி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: முன்னாள் ராணுவ வீரர் கைது
x
தினத்தந்தி 9 Feb 2021 12:06 AM GMT (Updated: 9 Feb 2021 12:06 AM GMT)

திருச்சி அருகே ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

ஏ.டி.எம்.எந்திரம் உடைப்பு
திருச்சி ஜீயபுரம் அருகே கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கியின் அருகில் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு காவலாளி இல்லை. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு இந்த ஏ.டி.எம். மையத்திற்கு வந்த ஒருவர், அங்குள்ள கண்காணிப்பு கேமராவை உடைத்தார்.பின்னர், திடீரென்று ஏ.டி.எம். எந்திரத்தை தான் கொண்டு வந்த ஆயுதத்தால் உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றார். நீண்டநேரம் போராடியும் எந்திரத்தை உடைக்க முடியாததால் எந்திரத்தில் உள்ள தொடுதிரையை மட்டும் உடைத்து விட்டு தப்பி சென்று விட்டார். எந்திரத்தை உடைக்க முடியாததால் அதில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது.

முன்னாள் ராணுவ வீரர் கைது
ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த சம்பவம் தொடர்பாக வங்கியின் சார்பில் ஜீயபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தேடி வந்தனர். இந்தநிலையில் வங்கியின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டு நேற்று திருச்சி மேலசிந்தாமணி பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 54) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், முன்னாள் ராணுவ வீரர் என்பதும், பணத் தேவைக்காக ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதும் தெரிய வந்தது. அதனை அவர் ஒப்புக் கொண்டதாகவும் தெரிகிறது. அதன்பேரில், கோவிந்தராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Next Story