அரசு கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திண்டிவனம் அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டிவனம்,
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வு நடைபெறவில்லை. தேர்வு மற்றும் அரியர்ஸ் தேர்வுக்கு பணம் கட்டியவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தில் இருந்து மீண்டும் தேர்வு நடத்துவதற்கான தேர்வு கட்டணத்தை வசூலிக்க கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கல்லூரியில் தேர்வு கட்டணம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
போராட்டம்
இது பற்றி அறிந்ததும் மாணவ-மாணவிகள் மீண்டும் தேர்வு கட்டணம் செலுத்த முடியாது எனவும், செமஸ்டர் தேர்வு வேண்டுமானால் நடத்திக் கொள்ளட்டும் என்று் கூறி நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாணவ-மாணவிகள் திண்டிவனம் நெய்குப்பி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவ-மாணவிகள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story