படப்பை அருகே விஷ வாயு தாக்கி 3 பேர் சாவு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது பரிதாபம்


படப்பை அருகே விஷ வாயு தாக்கி 3 பேர் சாவு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 15 Feb 2021 5:52 AM GMT (Updated: 15 Feb 2021 5:52 AM GMT)

சென்னை அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள காட்ரம்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான உணவு தயாரிக்கும் மையம் இயங்கி வருகிறது. இங்கு உள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து கழிவு நீரை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் நேற்று காட்ரம்பாக்கம் எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்த பாக்கியராஜ், (வயது 40), கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் (42) மற்றும் அமரம்பேடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (50) ஆகியோர் ஈடுபட்டனர்.

முதலில் தொட்டிக்குள் இறங்கிய முருகன் மயக்கம் அடைந்தார். அவரை காப்பாற்ற பாக்கியராஜ், ஆறுமுகம் இருவரும் தொட்டிக்குள் இறங்கினர். அவர்களும் மயக்கம் அடைந்தனர்.

விஷ வாயு தாக்கி சாவு

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு இருந்தவர்கள் இது குறித்து சோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் தொட்டிக்குள் இறங்கி அவர்களை மீட்டனர்.

அப்போது அவர்கள் 3 பேரும் விஷவாயு தாக்கி இறந்தது தெரியவந்தது. அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் வருகை தந்தார். சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கேட்டரிங் மைய உரிமையாளரிடம் போலீசார் விசாரித்து வருகி்ன் றனர்.

Next Story