வடவள்ளி அருகே பிளாஸ்டிக் பையால் முகம் மூடப்பட்ட வாலிபர் பிணம்; கொலையா? போலீசார் விசாரணை


வடவள்ளி அருகே பிளாஸ்டிக் பையால் முகம் மூடப்பட்ட வாலிபர் பிணம்;  கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 16 Feb 2021 5:15 PM GMT (Updated: 16 Feb 2021 5:17 PM GMT)

வடவள்ளி அருகே பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடி, கழுத்தை இறுக்கி வாலிபர் கொலை செய்யப் பட்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடவள்ளி

வடவள்ளி அருகே பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடி, கழுத்தை இறுக்கி  வாலிபர் கொலை செய்யப் பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குளத்தில் வாலிபர் பிணம்

கோவை வடவள்ளியை அடுத்த வீரகேரளம் பகுதியில் நாகராஜபுரம் குளம் உள்ளது.  இந்த குளம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்து உள்ளது.  இதனால் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருக்கும். இந்த நிலையில்  இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த சிலர் குளத்திற்கு சென்றனர். 

அப்போது குளத்தில் வாலிபர் ஒருவரின் பிணம் மிதந்து கொண்டிருந்தது. அவரது தலை, முகம் தெரியாதவாறு பிளாஸ்டிக் பையால் மூடப்பட்டு இருந்தது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளத்தின் முன்பு திரண்டனர். மேலும் சம்பவம் குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

உடனடியாக ஆர்.எஸ்.புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் குளத்தில் இறங்கி வாலிபர் உடலை பார்த்தனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதைத் தொடர்ந்து போலீசார் அவர் யார் என்பதை கண்டுபிடிக்க அந்த பகுதியில் ஏதாவது தடயங்கள் உள்ளதா என்று ஆராய்ந்தனர். 

அப்போது குளத்தின் கரையில் ஒரு சட்டை கிடந்தது. ஆனால் அதில் எந்தவிதமான துப்பும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.

கொலையா?

இதையடுத்து வாலிபரின் உடலை பரிசோதனை செய்தனர். அப்போது வாலிபரின் முகம் பிளாஸ்டிக் பை மூடிய நிலையில் இருந்தது. கழுத்து பகுதியில் இறுக்கம் அடைந்ததற்கான காயங்கள் இருந்தன. ஆகவே மர்ம ஆசாமிகள் அவரது முகத்தை மூடி, கழுத்தை இறுக்கியதால், அவர் மூச்சு திணறி இறந்து இருக்கலாம். 

இதனை தொடர்ந்து அவரது உடலை குளத்தில் வீசி சென்றார்களா? அல்லது நண்பர்களுடன் சேர்ந்து குளத்தின் கரையில் மது அருந்திய போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு அவர் கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது முன்பகையா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

எல்லைபிரச்சினையால் குழப்பம்

வாலிபர் உடல் கிடந்த இடம் ஆர்.எஸ்.புரம், செல்வபுரம், வடவள்ளி ஆகிய 3 போலீஸ் எல்லைப் பகுதியாகும். இதனால் யார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்துவது என்பது போலீஸ்இடையே குப்பம் ஏற்பட்டது. பல மணிநேர தாமதத்திற்கு பிறகு வடவள்ளி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

 ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு செல்வாம்பதி குளத்தில் துண்டு துண்டாக வெட்டப் பட்ட நிலையில் இளம் பெண் பிணமாக கிடந்தார். அந்த வழக்கில் துப்பு துலங்காத நிலையில் தற்போது குளக்கரையில் வாலிபரின் பிணம் பொதுமக்களிடையை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story