கத்திப்பாராவில் கடையில் புகுந்து செல்போன் திருட்டு


கத்திப்பாராவில் கடையில் புகுந்து செல்போன் திருட்டு
x
தினத்தந்தி 21 Feb 2021 10:15 AM GMT (Updated: 21 Feb 2021 10:15 AM GMT)

கத்திப்பாராவில் கடையில் புகுந்து செல்போன் திருட்டு கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்கள் உருவம் சிக்கியது.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆலந்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்லாப்தீன் (வயது40). இவர் கத்திப்பாராவில் செல்போன் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது விற்பனைக்காக வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள், கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.25 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

மேலும், கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா வயர்களையும் கொள்ளையர்கள் அறுத்து திருடி சென்று உள்ளனர். இது பற்றி பரங்கிமலை போலீசில் புகார் செய்தனர். விசாரணையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் முக கவசம் அணிந்து வந்த 2 கொள்ளையர்கள் உருவமும், அவர்கள் கடைக்குள் புகுந்து பொருட்களை எடுத்து செல்லும் முன் கேமரா வயர்களை அறுப்பது போன்ற காட்சிகளும் பதிவாகி இருந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story