வெங்கலில் குடோனில் பதுக்கிய 18 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் 6 பேர் கைது


வெங்கலில் குடோனில் பதுக்கிய 18 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் 6 பேர் கைது
x
தினத்தந்தி 22 Feb 2021 5:26 PM GMT (Updated: 22 Feb 2021 5:26 PM GMT)

வெங்கலில் லாரிகளில் கடத்தி வந்து விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்த 18 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை சென்னை மத்திய புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்தனர்.

பெரியபாளையம், 

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காரணி பாட்டை கிராமத்தில் டேங்கர் லாரியில் எரிசாராயம் கடத்தி வருவதாக சென்னை மத்திய புலனாய்வு துணை போலீஸ் சூப்பிரண்டுதட்சிணாமூர்த்திக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவரது தலைமையில் போலீசார் காரணை பாட்டை கிராமத்திற்கு விரைந்து சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு காரில் வந்தவர்களை சந்தேகத்தின் பேரில், நிறுத்தி விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். மேலும் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், அவர்கள் அதே பகுதியில் பக்தவச்சலம் என்பவருக்கு சொந்தமான இடத்தில் குடோன் அமைத்து அங்கு டேங்கர் லாரியில் எரிசாராயத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.

எரிசாராயம் விற்பனை

மேலும் சுமார் 18 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை 35 லிட்டர் கேன்களில் அடைத்து பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக அம்பத்தூரை சேர்ந்த ராஜ்குமார் (வயது 34), கள்ளிக்குப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் (33), சென்னை ராயபுரத்தை சேர்ந்த ஆரிஸ் (42), திருவொற்றியூரை சேர்ந்த ரவி (38), திருமுல்லைவாயலை சேர்ந்த மதன் (41), மேனாம்பேடு பகுதியை சேர்ந்த பாபு (34) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து 500 கேன்களில் அடைக்கப்பட்ட 18 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story