தேசிய முக்கியத்துவம் கருதி பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவ ஒத்துழைப்பு தேவை; சென்னை மாநகராட்சி, பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு இஸ்ரோ கடிதம்


தேசிய முக்கியத்துவம் கருதி பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவ ஒத்துழைப்பு தேவை; சென்னை மாநகராட்சி, பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு இஸ்ரோ கடிதம்
x
தினத்தந்தி 24 Feb 2021 12:55 AM GMT (Updated: 24 Feb 2021 12:55 AM GMT)

பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவ தேசிய முக்கியத்துவம் கருதி ஒத்துழைப்பு நல்குமாறு சென்னை மாநகராட்சிக்கும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு இஸ்ரோ கடிதம் எழுதி உள்ளது.

இஸ்ரோ கடிதம்

இதுகுறித்து இஸ்ரோ நிறுவனம், சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் பி.எஸ்.என்.எல். அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வருகிற 28-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டை இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்ணில் ஏவுகின்றனர். இதற்கு, எந்த இடையூறும் இல்லாத, தகவல் தொடர்பு சேவை மிக முக்கியமானது.

தேசிய முக்கியத்துவம் கருதி ஒத்துழைப்பு
இஸ்ரோவின் அனைத்து முக்கியமான தகவல் தொடர்பு இணைப்புகளும், பி.எஸ்.என்.எல். மற்றும் பி.எஸ்.என்.எல். ஆப்டிகல் பைபர் இணைப்புகளும், தேசிய நெடுஞ்சாலை வழியே செல்கிறது. எனவே, நாளை 25-ந்தேதியில் இருந்து 28-ந் தேதி வரை, சென்னை, பெரம்பூர், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், பொன்னேரி உட்பட, பி.எஸ்.என்.எல். இணைப்பு செல்லும் நெடுஞ்சாலைகளில், சாலை பராமரிப்பு பணி உட்பட, பள்ளம் தோண்டுதல் தொடர்பான பணிகளை மேற்கொள்ளுவதை தவிர்க்க வேண்டும். தடையில்லாத சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவ தேசிய முக்கியத்துவம் கருதி ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தைத் தொடர்ந்து, நாளை 25-ந்தேதியில் இருந்து வருகிற 28-ந்தேதி வரை, எந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதை தவிர்க்குமாறு, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளுக்கு, பி.எஸ்.என்.எல்., கடிதம் அனுப்பி உள்ளது.

Next Story