வாலிபர் வீட்டு முன் 2 குழந்தைகளுடன் பெண் தர்ணா


வாலிபர் வீட்டு முன் 2 குழந்தைகளுடன் பெண் தர்ணா
x
தினத்தந்தி 1 March 2021 7:41 PM GMT (Updated: 1 March 2021 7:41 PM GMT)

ரூ.15 லட்சத்தை திரும்ப பெற்று தரக்கோரி பெரம்பலூரில் வாலிபர் வீட்டின் முன் தனது 2 குழந்தைகளுடன் அமர்ந்து பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்:

2 குழந்தைகளுடன் பெண் தர்ணா
பெரம்பலூர் நகராட்சி 15-வது வார்டுக்கு உட்பட்ட தம்பி நகரை சேர்ந்த ஜோசப்பின் மகன் ஜெகன் (வயது 35). இவரது வீட்டின் முன்பு நேற்று மாலை ஒரு பெண் திடீரென்று தனது 2 குழந்தைகளுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த பெரம்பலூர் போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா வீரபாண்டியன்பட்டிணம் ராஜ்கண்ணா நகரை சேர்ந்தவரும், பட்டிமன்ற பேச்சாளருமான மகாலட்சுமி (32) என்பதும், இவர் கணவரை விட்டு பிரிந்து காயல்பட்டினம் விசாலாட்சி அம்மன் கோவில் தெருவில் தனது மகள் ஸ்ரீஜா (12), மகன் ஸ்ரீஜித்துடன் (7) வசித்து வருவதும், தெரியவந்தது.
தலைமறைவு
விசாரணையின்போது மகாலட்சுமி கூறியதாக, போலீசார் தெரிவித்ததாவது;-
மகாலட்சுமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்கண்ணா நகரில் வசித்து வந்தபோது, அவரது பக்கத்து வீட்டில் ஜெகன், அவரது தாயுடன் வசித்துள்ளார். அப்போது மகாலட்சுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஜெகன் ஆசை வார்த்தை கூறியதாகவும், இதை நம்பி அவருடன் மகாலட்சுமி பழகி வந்ததாகவும், அப்போது ரூ.8 லட்சம் மற்றும் 35 பவுன் நகையை விற்று ரூ.7 லட்சத்தை ஜெகனிடம் மகாலட்சுமி கொடுத்ததாகவும், அதற்காக பத்திர ஆவணங்கள், கடன் பத்திரம் ஆகியவற்றை ஜெகன் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் வாங்கிய பணத்தை ஜெகன், மகாலட்சுமியிடம் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். தற்போது பணத்தை கேட்டு ஜெகன் வீட்டிற்கு மகாலட்சுமி வந்தபோது, ஜெகன் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.
ரூ.15 லட்சத்தை...
இதனால் மனமுடைந்த மகாலட்சுமி தனது 2 குழந்தைகளுடன் ரூ.15 லட்சத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, ஜெகன் வீட்டின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
இவை அனைத்தும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மகாலட்சுமியை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story