கும்மிடிப்பூண்டி அருகே குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்


கும்மிடிப்பூண்டி அருகே குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 March 2021 6:28 AM GMT (Updated: 3 March 2021 6:28 AM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்தது ஏடூர் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கும்புளி கிராமத்தில் 9-வது வார்டு பகுதியில் 35 குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி மக்களுக்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இது தொடர்பாக 9-வது வார்ட்டில் உள்ள பொதுமக்கள் பலமுறை ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் மனு அளித்தும், நேரில் புகார் தெரிவித்தும் எவ்வித பதிலும் இல்லை.

சாலை மறியல்

இந்த நிலையில் முறையாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று அந்த பகுதியில் கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மாதர்பாக்கம் நோக்கி சென்ற அரசு பஸ்சை அவர்கள் சிறை பிடித்தனர். சாலையில் முட்களை வெட்டி போட்டும், பிளாஸ்டிக் பேரல்கள் மற்றும் கற்களையும் போட்டும் தடையை ஏற்படுத்திய கிராம மக்கள் குடிநீர் பிரச்சினைக்கு ஊராட்சி நிர்வாகம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

பேச்சுவார்த்தை

தகவலறிந்து சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் அங்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊராட்சி நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததால் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story