கடமலைக்குண்டு அருகே கள்ள ஓட்டு போட்டதால் பரபரப்பு


கடமலைக்குண்டு அருகே கள்ள ஓட்டு போட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 April 2021 5:56 PM GMT (Updated: 6 April 2021 5:56 PM GMT)

கடமலைக்குண்டு அருகே கள்ள ஓட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடமலைக்குண்டு:
கடமலைக்குண்டு அருகே கொம்புக்காரன்புலியூரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 50). கூலித்தொழிலாளி. நேற்று காலை இவர், வாக்களிப்பதற்காக அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடிக்கு சென்றார். அப்போது அங்கு பெரியசாமியின் வாக்குச்சீட்டை தேர்தல் அலுவலர்கள் சோதனை செய்தனர். அதில், பெரியசாமி பெயரில் வேறொருவர் கள்ள ஓட்டு பதிவு செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டி இருப்பதால் மாலையில் மீண்டும் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்குமாறு பெரியசாமியிடம் தேர்தல் அலுவலர்கள் அறிவுறுத்தி அனுப்பினர். 
இதுகுறித்து தகவல் அறிந்த பெரியசாமியின் உறவினர்கள் சுமார் 20 பேர் வாக்குச்சாவடி முன்பு ஒன்றுகூடி தேர்தல் அலுவலர்களின் கவனக்குறைவை கண்டித்து, தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்தனர். 
இதையடுத்து அவர்களிடம் தேர்தல் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் சமாதானம் அடையாமல் வாக்களிக்காமல் திரும்பி சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story