விழுப்புரத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல பஸ்கள் இல்லாததால் நள்ளிரவில் பயணிகள் சாலை மறியல்


விழுப்புரத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல  பஸ்கள் இல்லாததால் நள்ளிரவில் பயணிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 7 April 2021 5:09 PM GMT (Updated: 7 April 2021 5:09 PM GMT)

விழுப்புரத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல பஸ்கள் இல்லாததால் நள்ளிரவில் பயணிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம், 

சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் தங்கி வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தனர். பின்னர் அவர்கள் ஜனநாயக கடமையாற்றி விட்டு மீண்டும் சொந்த ஊரில் இருந்து தாங்கள் பணியாற்றும் இடங்களுக்கு திரும்பினர். இதனால் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திலும் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஆனால் விழுப்புரத்தில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, சேலம், ஈரோடு, வேலூர் உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் பல மணி நேரம் பஸ் நிலையத்திலேயே காத்துக்கிடந்தனர்.

பயணிகள் தவிப்பு

இதுபற்றி அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் பயணிகள் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் மிகவும் அவதியடைந்தனர். இரவு 10 மணிக்கு மேலும் நிலைமை சீராகாமல் இதே நிலை நீடித்தது. பயணிகளின் தேவைக்கேற்ப பஸ்கள் இயக்கப்படாததால் ஏராளமான பயணிகள் பல மணி நேரம் பஸ் நிலையத்திலேயே தவித்தனர். ஒரு மணி நேரம், 2 மணி நேரத்திற்கு ஒருமுறை என்று விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்குள் ஒன்றிரண்டு பஸ்கள் மட்டுமே வந்தன. அந்த பஸ்களிலும் பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்பட்டது. ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு பஸ்களில் ஏறினர். பலர் பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கியவாறும், மேற்கூரையில் அமர்ந்தவாறும் ஆபத்தான பயணம் மேற்கொண்டதை காண முடிந்தது.
இந்த நிலைமை நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியையும் கடந்து நீடித்தது. இதுபற்றி பயணிகள் சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளையும் மற்றும் போலீசாரையும் தொடர்பு கொண்டும் கூடுதல் பஸ்கள் இயக்கக்கோரி முறையிட்டனர். இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் 200-க்கும் மேற்பட்டோர் நள்ளிரவு 1 மணியளவில் பஸ் நிலையத்தின் நுழைவுவாயில் முன்பு திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார், பஸ் நிலையத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக பஸ்கள் இயக்கப்பட்டால்தான் மறியல் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறியபடி அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளை போலீசார், தொடர்பு கொண்டதன்பேரில் விழுப்புரம் போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து சென்னைக்கு செல்ல ஒரே நேரத்தில் 4 பஸ்கள் வரவழைக்கப்பட்டன. அந்த பஸ்சில் பெரும்பாலான பயணிகள் ஏறி பயணம் செய்தனர்.

அலைமோதிய கூட்டம்

அதேபோல் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம், ஈரோடு, வேலூர் உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களுக்கும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதலாக பஸ்கள் வரவழைக்கப்பட்டு இயக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் அனைவரும் நள்ளிரவு 1.45 மணியளவில் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பஸ்சில் ஏறி பயணம் செய்தனர். இருந்தபோதிலும் நேற்று காலை வரை பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
இந்த திடீர் மறியல் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story