வாக்குச்சாவடி முன்பு சட்டவிரோதமாக கூடிய அ.தி.மு.க.-தி.மு.க.வினர் 200 பேர் மீது வழக்கு


வாக்குச்சாவடி முன்பு சட்டவிரோதமாக கூடிய அ.தி.மு.க.-தி.மு.க.வினர் 200 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 7 April 2021 5:16 PM GMT (Updated: 7 April 2021 5:16 PM GMT)

வாக்குச்சாவடி முன்பு சட்டவிரோதமாக கூடிய அ.தி.மு.க.-தி.மு.க.வினர் 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கோவை

சட்டமன்ற தேர்தலையொட்டி கோவையில் நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 

இந்த நிலையில் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி தனது ஆதரவாளர்கள் சிலருடன் செல்வபுரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியை பார்வையிட வந்தார். அப்போது அங்கிருந்த அ.தி.மு.க.வினர், தி.மு.க. வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்கள். 

மேலும் வேட்பாளரின் காரை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தி.மு.க. வேட்பாளரை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஹாலன் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். 

இதில் சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை சேர்ந்த 200 பேர் மீது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், சட்டவிரோதமாக கூடுதல், தொற்று நோய் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


Next Story