இருதரப்பினர் இடையே மோதல் 5 பேர் படுகாயம்


இருதரப்பினர் இடையே மோதல் 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 7 April 2021 11:35 PM IST (Updated: 7 April 2021 11:35 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் மீனவ கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்:
நாகையில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் மீனவ கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
முன்விரோதம் 
நாகையில் கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி பாதிப்பிற்கு பிறகு மீனவர்கள் பல்வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். இந்தநிலையில் ஆரிய நாட்டு தெருவில் வசித்த மீனவர்கள் நகரில் பல்வேறு பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். இதனால்  மகாலட்சுமி நகரில் குடியமர்த்தப்பட்டவர்களுக்கும், ஆரிய நாட்டு தெருவில் இருப்பவர்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நடந்த சட்டசபை தேர்தலில் வாக்கு சேகரிப்பதில் தி.மு.க,,  அ.தி.மு.க.வினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் சமரசம் செய்து வைத்தனர். 
தாக்குதல் 
இந்தநிலையில் நேற்று மகாலட்சுமி நகரை சேர்ந்த மாரியப்பன் (வயது29), நகுலன் (27), குகன் (30), நித்தியன் (36), நாகேந்திரன் (30) ஆகியோரை ஆரிய நாட்டு தெரு மீனவர்கள் நாகை காடம்பாடி, ஏழைப்பிள்ளையார் கோவில் ஆகிய பகுதியில் வழி மறித்து தாக்கினர். இதில் படுகாயமடைந்த 5 பேரும்  நாகை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். அவர்களை பார்க்க வந்த மகாலட்சுமி நகர் மீனவர்களை நாகை அரசு மருத்துவமனை வளாகத்தில்  அரிவாளுடன் வந்து வெட்ட முயன்றனர்.
போலீஸ் பாதுகாப்பு
தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகுமாரன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் அதிவிரைவு படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.  இதுகுறித்து வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவ கிராமத்தில் இரு தரப்பினர் இடையே  அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
1 More update

Next Story