செய்யாறு அருகே தூக்குப் போட்டு இளம்பெண் தற்கொலை, சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார்.


செய்யாறு அருகே தூக்குப் போட்டு இளம்பெண் தற்கொலை, சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார்.
x
தினத்தந்தி 8 April 2021 5:35 PM GMT (Updated: 8 April 2021 5:35 PM GMT)

செய்யாறு அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

செய்யாறு

தூக்குப்போட்டு தற்கொலை

lதிருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 30). சென்னை சாலவாக்கம் கந்தன்சாவடியில் வெல்டராக பணியாற்றி வருகிறார். வேலை செய்யும்போது அதே பகுதியை சேர்ந்த மரகதம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் தேவஸ்ரீ என்ற மகளும், 4 வயதில் சபரிஷ் என்ற மகனும் உள்ளனர்.

 குடிப்பழக்கத்துக்கு ஆளான சீனிவாசன் அடிக்கடி குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஓட்டுப்போடுவதற்காக தனது சொந்த ஊரான நெல்வாய் கிராமத்திற்கு சீனிவாசன், தனது மனைவியுடன் வந்துள்ளார். 

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மரகதம், வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டார். இதைபார்த்த குழந்தைகள் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த தாத்தா ஆறுமுகம், பாட்டி ரங்கநாயகியிடம் கூறியதும் அவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் மரகதம் இறந்துவிட்டார்.

சாவில் சந்தேகம்

அனக்காவூர் போலீசார் சென்று மரகதத்தின் உடலை செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் நேற்று மாலை மரகதத்தின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள் மரகதத்தின் உடலில் பல இடங்களில் காயம் இருப்பதால் அவரை அடித்து கொன்றிருப்பதாக புகார் தெரிவித்தனர்.

 இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மரகத்தின் உறவினர்கள் மருத்துவமனை எதிரில் ஆற்காடு சாலையில் மறியல் செய்ய முயன்றனர். அவர்களிடம் செய்யாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பவம் நடந்த இடமான நெல்வாய் கிராமம் அனக்காவூர் போலீஸ் பகுதி உட்பட்டது என்பதால்  அங்கு புகார் அளிக்கும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story