வெளிமாநிலங்களில் இருந்து வந்த 41 பேருக்கு தொற்று கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது


வெளிமாநிலங்களில் இருந்து வந்த 41 பேருக்கு தொற்று கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது
x
தினத்தந்தி 16 April 2021 12:49 PM GMT (Updated: 16 April 2021 12:49 PM GMT)

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கி விட்டது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (வியாழக்கிழமை) தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் மட்டும் 29 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 41 பேருக்கும், 256 குழந்தைகளும், 1,199 முதியவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 93 ஆயிரத்து 995 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 4 ஆயிரத்து 797 ஆண்கள், 3 ஆயிரத்து 190 பெண்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 987 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 558 பேரும், செங்கல்பட்டில் 685 பேரும், கோவையில் 534 பேரும், திருவள்ளூரில் 473 பேரும் குறைந்தபட்சமாக அரியலூரில் 29 பேரும், பெரம்பலூரில் 11 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

29 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 5 லட்சத்து 44 ஆயிரத்து 549 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 9 லட்சத்து 62 ஆயிரத்து 935 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 81 ஆயிரத்து 247 ஆண்களும், 3 லட்சத்து 81 ஆயிரத்து 652 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 36 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 34 ஆயிரத்து 908 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 34 ஆயிரத்து 93 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 15 பேரும், தனியார் மருத்துவமனையில் 14 பேரும் என 29 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 8 பேரும், காஞ்சீபுரத்தில் 4 பேரும், நாகப்பட்டினத்தில் 3 பேரும், செங்கல்பட்டு, கோவை, நெல்லை, சேலத்தில் தலா இருவரும், கடலூர், தர்மபுரி, ஈரோடு, மதுரை, தென்காசி, விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 13 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரத்து 999 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

4,176 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 4,176 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,360 பேரும், கோவையில் 643 பேரும், செங்கல்பட்டில் 369 பேரும் அடங்குவர். இதுவரையில் 8 லட்சத்து 91 ஆயிரத்து 839 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 58 ஆயிரத்து 97 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story