செங்கல்பட்டு அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் சாவு


செங்கல்பட்டு அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் சாவு
x
தினத்தந்தி 19 April 2021 2:00 AM GMT (Updated: 19 April 2021 2:00 AM GMT)

செங்கல்பட்டு அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் இறந்தனர்.

செங்கல்பட்டு, 

செங்கல்பட்டு ராமபாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மகன் ஜித்து என்ற சித்தேஸ்வரன் (வயது 20). இவர் செங்கல்பட்டு அரசு கலை கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ஆகாஷ் (19). இவர் கோவையில் உள்ள தனியார் கலைகல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

நீச்சல் தெரியாத அவர்கள் செங்கல்பட்டு அடுத்த நென்மேலியில் உள்ள விவசாய கிணறு ஒன்றில் நேற்று குளிக்க சென்றனர். மோட்டார் சைக்கிளை அங்கு நிறுத்திவிட்டு அவர்கள் அணிந்திருந்த உடைகளையும் கழற்றி வைத்துவிட்டு கிணற்றில் இறங்கி குளித்தனர்.

சாவு

நீண்ட நேரமாக அவர்கள் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அந்த பகுதியில் மாடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் கிணற்றில் எட்டி பார்த்தனர். அவர்கள் இருவரையும் காணவில்லை. அவர்கள் இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசில் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து செங்கல்பட்டு தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து கிணற்றில் மூழ்கி இறந்த இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story