கத்தியால் ஒருவரையொருவர் குத்தியதில் லாரி டிரைவர் சாவு


கத்தியால் ஒருவரையொருவர் குத்தியதில் லாரி டிரைவர் சாவு
x
தினத்தந்தி 19 April 2021 6:24 PM GMT (Updated: 19 April 2021 6:24 PM GMT)

காரைக்குடியில் கத்தியால் ஒருவரையொருவர் குத்தியதில் லாரி டிரைவர் உயிரிழந்தார். மீன் வியாபாரி காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை போலீசார் கைது செய்தனர்..

காரைக்குடி,

காரைக்குடியில் கத்தியால் ஒருவரையொருவர் குத்தியதில் லாரி டிரைவர் உயிரிழந்தார். மீன் வியாபாரி காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை போலீசார் கைது செய்தனர்..
இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரத்த வெள்ளத்தில்...

காரைக்குடியில் கழனிவாசல்-வாட்டர் டேங்க் சாலையில் வாரச்சந்தை கூடும் இடத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து கழனிவாசல் கிராம நிர்வாக அதிகாரி சங்கரேஸ்வரிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் காரைக்குடி வடக்கு போலீசில் புகார் தெரிவித்தார்.
இதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அங்கு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். சம்பவம் நடந்த இடத்தில் கத்தி, மோட்டார் சைக்கிள், ஒரு ஜோடி செருப்பு கிடந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றி கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தினார்கள்.

லாரி டிரைவர்

விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் காரைக்குடி அண்ணா நகரை சேர்ந்த லாரி டிரைவரான திருச்செல்வம்(வயது 29) என தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் சம்பவம் நடந்த இடத்தில் நின்றிருந்த மோட்டார் சைக்கிள் காரைக்குடி அண்ணா நகரை சேர்ந்த முத்துமணிக்கு சொந்தமானது என்றும், அவர் கத்திக்குத்து காயங்களுடன் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் போலீசாருக்கு ெதரிய வந்தது.
இதையடுத்து சிவகங்கை சென்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முத்துமணியிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட திருச்செல்வத்தின் உறவினர் ஒருவர் காரைக்குடி வாரச்சந்தையில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். முத்துமணியும் அந்த வாரச்சந்தையில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு இருந்து உள்ளது.

கத்தியால் குத்தி கொலை

இதை கேள்விப்பட்ட திருச்செல்வம், முத்துமணியிடம் எனது உறவினருடன் எப்படி நீ தகராறு செய்யலாம் என்று கேட்டு இருக்கிறார். பின்னர் இது குறித்து பேசி முடிவுக்கு வருவோம் என கூறி முத்துமணியை சம்பவத்தன்று இரவு சந்தைக்கு அழைத்து உள்ளார். அங்கு இருவரும் மது அருந்தி உள்ளனர். பின்னர் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த திருச்செல்வம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முத்துமணியை குத்தி உள்ளார். பின்னர் அந்த கத்தியை பறித்து கொண்டு திருச்செல்வத்தை சரமாரியாக முத்துமணி குத்தி கொலை செய்து உள்ளார். அதன்பிறகு அங்கிருந்து காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பொய்யான காரணங்களை கூறி சிகிச்சை பெற்ற முத்துமணி மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து முத்துமணியை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story