கொரோனா தொற்று விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம்


கொரோனா தொற்று விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 24 April 2021 12:03 PM GMT (Updated: 24 April 2021 12:03 PM GMT)

கொரோனா தொற்று விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தினந்தோறும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் விதமாக பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகளுக்கு அபராதம் விதிக்கும் முறை தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சப்-கலெக்டர் செல்வமதி, பேரூராட்சி அதிகாரி முகமது ரிஸ்வான் ஆகியோர் தலைமையில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினந்தோறும் ஆய்வு மேற்கொண்டு முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கிறார்கள்.

உரிய விதிமுறைகளை மீறி செயல்படுபவர்களுக்கு அபராதம் விதிப்பது மட்டுமல்லாமல், விதிமுறைகளுடன் முக கவசம் அணிந்து செயல்படுபவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துகள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி முக கவசம் அனியாதவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது.

குழந்தைகளுடன் தேவையில்லாமல் வெளியே வரும் பெற்றோர்களுக்கு அறிவுரை கூறுகின்றனர். ஒரு பக்கம் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது முகம் சுழிக்க வைத்தாலும், விதிமுறைகளுடன் செயல்படுபவர்களை பாராட்டி இனிப்பு வழங்குவது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு அளித்துள்ளது. மேலும் அரசு பஸ்களில் சமூக விலகலுடன் பயணம் செய்யாதவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. கொரோனோ பாதிப்பை குறைக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story