புதுவையில் தேர்தல் வெற்றி பேரணிக்கு தடை; ஊரடங்கு கட்டுப்பாடுகள் 3-ந்தேதி வரை நீட்டிப்பு; மதுக்கடைகளும் மூடப்படும்


புதுவையில் தேர்தல் வெற்றி பேரணிக்கு தடை; ஊரடங்கு கட்டுப்பாடுகள் 3-ந்தேதி வரை நீட்டிப்பு; மதுக்கடைகளும் மூடப்படும்
x
தினத்தந்தி 29 April 2021 2:23 AM GMT (Updated: 29 April 2021 2:23 AM GMT)

புதுச்சேரியில் தேர்தல் வெற்றி பேரணிக்கு தடை விதிப்பதுடன், வருகிற 3-ந்தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும். மதுக்கடைகளும் மூடப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இரவுநேர ஊரடங்கு

புதுவையில் கொரோனா பரவல் தினந்தோறும் அதிகரித்து புதுப்புது உச்சத்தை தொட்டு வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு கடும் நடவடிக்கை எடுத்த போதிலும் தொற்று பாதிப்பு குறைந்தபாடில்லை.

இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை கடைகளை திறக்கவும், பொதுமக்கள் நடமாட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

பகலிலும் காய்கறி, மளிகை, மருந்து, ஓட்டல்கள், டீக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. ஆனாலும் தொற்று குறையாததையடுத்து வாரஇறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.

கட்டுப்பாடுகள் தீவிரம்

அதன்பின் அரசு சார்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்பேரில் பெரிய கடைகள், வணிக வளாகங்கள், சுற்றுலாதலங்கள், கடற்கரை, பூங்காக்கள், சலூன்கள், பொது அரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன.

இதில் மளிகை கடைகள், உழவர்சந்தைகள், மார்க்கெட்டுகள், மருந்து கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை கடைகள் திறந்து இருக்க தடை இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் பாகுபாடின்றி அனைத்துக்கடைகளும் திறக்கப்பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். கடைகளை திறப்பதில் வியாபாரிகள் இடையே இருந்த குழப்பத்துக்கு விளக்கமளித்து கலெக்டர் பூர்வாகார்க் நேற்று முன்தினம் முற்றுப்புள்ளி வைத்தார். இதையடுத்து இரவுநேர ஊரடங்கை தவிர்த்து மற்ற நேரங்களுக்கான கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.

3-ந்தேதி வரை நீட்டிப்பு

கொரோனா ஊரடங்கு நடைமுறை நாளையுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைவதாக இருந்தது. இந்தநிலையில் நேற்று புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடந்த உயர்மட்டக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வரும் 2-ந் தேதி நடைபெறுவதையொட்டி தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு குறித்து பரிசீலிக்குமாறு அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தியது.

அதன்படி தற்போது புதுச்சேரியில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாட்டுகள் அனைத்தும் 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வெற்றி பேரணிக்கு தடை

இதில் கூட்டம் கூடுதல், பொதுக்கூட்டம் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியமின்றி பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் சம்பந்தமாக வேட்பாளர்கள், அவர்களது பிரதிநிதிகள் மட்டும் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களும், வாக்கு எண்ணும் பணிக்கு வரும் அரசு ஊழியர்களும் தொற்று இல்லை என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறி முறைகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இந்திய தே்ாதல் ஆணையத்தின் உத்தரவுப்படி வெற்றி பேரணிக்கு தடை செய்யப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சான்றிதழ் பெற அவருடன் 2 பேரை மட்டும் அழைத்து வர அனுமதி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுக்கடைகளுக்கும் தடை

ஏற்கனவே மதுக்கடைகள், சாராயக்கடை, கள்ளுக்கடைகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) வரை தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கலால்துறை துணை ஆணையர் சுதாகர் விடுத்துள்ள ஒரு உத்தரவில், மாநிலத்தில் அனைத்து விதமான மதுபான கடைகளும் வருகிற 3-ந்தேதி வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story